ஐதராபாத்: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பங்கேற்காதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டியில் வலிமையான நியூசிலாந்து அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியுள்ளது. நியூசிலாந்து அணி தங்களது முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்தப் பக்கம் நெதர்லாந்து அணியை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் இந்தப் போட்டியிலும் கேன் வில்லியம்சன் களமிறக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக டாம் லேதமே கேப்டனாக தொடர்கிறார். அதேபோல் ஜேம்ஸ் நீஷம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஃபெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணி தரப்பில், சைபிராண்ட் மற்றும் ரியான் கிளைன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டாஸ் வென்ற பின் நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேசுகையில், நான் முதலில் பந்துவீச விரும்புகிறோம். இந்த ஆடுகளம் சாதகமாக இருக்கிறது. அதேபோல் இரண்டாம் பாதியில் கூட பெரியளவில் பனிப்பொழிவு இல்லை. நாங்கள் நல்ல மனநிலையில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பேசுகையில், நாங்களும் முதலில் பந்துவீசவே விரும்பினோம். கடந்த வாரத்தில் இதே மைதானத்தில் பயிற்சி போட்டியில் விளையாடினோம். கடந்த போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். குறிப்பாக கான்வே மற்றும் ரச்சின் இருவரும் வேற மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று தெரிவித்தார்.
காயம் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் உள்ள வில்லியாம்சன், பயிற்சி போட்டியின் போது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருப்பினும் முன்னெச்சரிக்கை காரணமாகவும், முழுமையான ஃபிட்னஸை எட்டவும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்திலும் வில்லியம்சன் களமிறங்காதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.