ஐதராபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக களமிறங்கிய விளையாடிய முதல் போட்டியிலேயே கேன் வில்லியம்சன் காயமடைந்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஊன்றுகோல் உதவியுடன் தான் விமானத்திலேயே ஏறினார். இதன்பின் வில்லியம்சன் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக மருத்துவ சிகிச்சையுடன் கூடிய ஓய்வில் இருந்து வந்தார்.

இதனால் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக களமிறங்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வில்லியம்சன் நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை வில்லியம்சன் இன்னும் முழு ஃபிட்னஸை எட்டாததால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனால் வில்லியம்சன் மீண்டும் பழைய மாதிரி பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த உலகக்கோப்பையை நூலிழையில் இழந்த போதும், உதட்டில் சிரிப்பு மாறாமல் இருந்த வில்லியம்சன் தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ஃபீல்டிங் செய்யாமல் பேட்டிங் மட்டும் செய்தார். இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி ரிஸ்வானின் அபார சதத்தால் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய கான்வே டக் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் உடனடியாக களம் புகுந்தார் வில்லியம்சன்.
6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக களமிறங்குவதால் அவரது ஆட்டம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பலமான பவுலிங் அட்டாக்கை எதிர்த்து எந்த பதற்றமும் இல்லாமல் சிறப்பாக ஆடினார் வில்லியம்சன். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியாக விளாசி தள்ள, 50 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ரிடையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இதனால் பலரும் வில்லியம்சன் சிறப்பாக கம்பேக்கை கொடுத்துள்ளதாக பாராட்டி வருகின்றனர்.