மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதால் இந்திய வீரர்கள் தங்களுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி உலகக்கோப்பை போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் கேப்டன் கபில்தேவ் விளையாட்டு வீரர்களுக்கு காயம் என்பது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக தான் இருக்கும். இந்த நிலைமை முன்னேறும் என நான் நினைக்கிறேன். எனக்கு ஹர்திக் பாண்டியாவை பார்த்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
ஏனென்றால் அவர் விரைவில் காயம் அடைந்து விடுகிறார். நமது வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருந்தாலே இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக உலகக்கோப்பை தொடரில் விளங்கும். உலகக்கோப்பை தொடர் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருகிறது. எனவே நீங்கள் அதற்காக தயாராக இருக்க வேண்டும்.
உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் நீங்கள் பல பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க வேண்டும். அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கபில்தேவ் ஒரு நாள் உலகக்கோப்பை தொடருக்காக தயாராகும் இந்த தருணத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டியை கொஞ்சம் தள்ளி வையுங்கள் என்று கபில்தேவ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இந்திய அணி வரும் 12ஆம் தேதி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடுகிறது. எனினும் டி20 போட்டிகளுக்கு தனி அணியை தான் தேர்வு குழு தேர்வு செய்யும். ஆசியக் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் என தெரிகிறது.