மும்பை : ஆசிய கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு ரசிகர்களுக்கு இந்திய அணி மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அவ்வளவு ஏன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்தியா உலகக் கோப்பையை வெல்வது கடினம் என்று கூறி வந்தார்கள்.
தற்போது ஆசிய கோப்பையில் நாம் வெற்றி பெற்ற பிறகு தற்போது பலரும் இந்தியாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்துள்ள பேட்டி ஒன்றில், உலகக் கோப்பை தொடரில் நாம் அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் அதுவே மிகவும் முக்கியம்.

அதன் பிறகு அதிர்ஷ்டம் உள்ளிட்ட பல காரணிகள் இருந்தால் மட்டுமே நம்மால் உலக கோப்பையை வெல்ல முடியும். நமது அணி தற்போது அனைத்திலும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய இதயம் இந்தியா வெல்லும் என்று சொல்கிறது. ஆனால் மனது இன்னும் நாம் கடினமாக உழைக்க வேண்டும் என்று கூறுகிறது. என் அணியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். மற்ற அணிகள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. இதனால் மற்ற அணிகள் குறித்து என்னால் பேச முடியவில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை நாம் உலகக் கோப்பைக்கு தயாராகி விட்டோம். உத்வேகம் மற்றும் மகிழ்ச்சியுடன் இந்த தொடரை நமது வீரர்கள் விளையாட வேண்டும். சிராஜ் நேற்று பந்து வீசிய விதத்தை பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்கள் எடுப்பது பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது.

ஒரு காலத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் சுழற் பந்துவீச்சாளர்களை நம்பி இருக்க வேண்டும். தற்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. இதனால் தான் இந்திய அணி பலமாக விளங்குகிறது. ஆசிய கோப்பையில் இந்திய அணி பிரமாதமான விளையாட்டை வெளிப்படுத்தியது. ஒரு ரசிகராக 30 ரன்கள் போல் எதிர் அணியை சுருட்டி விட வேண்டும் என நினைப்போம். ஆனால் ஒரு பார்வையாளர் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
எந்த அணியாக இருந்தாலும் சரி ஒரு முக்கிய இரண்டு வீரர்கள் காயம் அடைந்தால் அது அணியின் செயல்பாட்டு பாதிக்கும். கில் இந்திய அணியின் எதிர்காலமாக திகழ்கிறார். இது போன்ற திறமையான வீரர்கள் நமது நாட்டில் இருப்பது நினைத்து பெருமைப்படுகிறேன். தேர்வு குழுவினர் சிறப்பான ஒரு பணியை செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்து அதிகம் பேச வேண்டாம் என்று கபில்தேவ் கூறியுள்ளார்.