மும்பை : ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை தொடருக்கு 17 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அகார்கர் அண்மையில் அறிவித்தார்.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக குறிப்பிட்ட அஜித் அகார்கர், கே எல் ராகுலுக்கு லேசான காயம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் இவ்விருவரும் ஆசிய கோப்பை அணியின் இடம்பெற்று இருக்கிறார்கள்.

கூடுதல் வீரராக சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் உலகக்கோப்பை தொடருக்கு முன் அனைத்து வீரர்களையும் கண்டிப்பாக பரிசோதித்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் மிகவும் அருகில் வந்துவிட்டது. ஆனால் நீங்கள் இன்னும் சில வீரர்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் விளையாடும் போது சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
ஒட்டுமொத்த அணியே அந்த பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிறது. அதில் சில வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ய நல்ல வாய்ப்பாக அமையும். இதில், நான் பயப்படுவது குறிப்பிட்ட சில வீரர்கள் மீண்டும் உலக கோப்பை போட்டியின் போது காயமடைந்தால் நிச்சயம் அது சரியான விஷயமாக இருக்காது. காயத்திலிருந்து திரும்பிய வீரர்களுக்கு நிச்சயம் ஆசிய கோப்பை போட்டியில் இடம் வழங்க வேண்டும்.
அவர்கள் தங்களுடைய உடல் தகுதியை நிரூபித்து விட்டார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் உலக கோப்பையில் விளையாடலாம். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமே கிடையாது. சில வீரர்கள் இன்னும் உடல் தகுதியைப் பெறவில்லை என்றால் உலகக்கோப்பை தொடருக்கு அந்த வீரரை தேர்வு செய்யாமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். உலகக் கோப்பைக்கான அணியை தயார் செய்வதற்கு ஆசிய கோப்பை ஒரு நல்ல களமாக அமையும்.
இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பை தொடரில் எதைப் பற்றியும் நினைக்காமல் தங்களுடைய திறமையை சுதந்திரமாக வெளிப்படுத்த வேண்டும். வீரர்களின் திறமையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவர்களை அணியில் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆசிய கோப்பை இலங்கையிலும் உலகக்கோப்பை இந்தியாவிலும் நடைபெறும் என்று எனக்குத் தெரியும். எனினும் சிறந்த மற்றும் உடல் தகுதி உடைய அணியை தான் நீங்கள் தேர்வு செய்து விளையாட வேண்டும் என கபில் தேவ் கூறியுள்ளார்.