உத்வேகம்
1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து மிகக் குறைந்த ஸ்கோர் எடுத்து இருந்தது. எனினும், கேப்டன் கபில் தேவ் சொன்ன வார்த்தைகளால் உத்வேகம் அடைந்து போராடிய இந்திய அணி வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
வெற்றி வாய்ப்பு இல்லை
இந்திய அணி 1983 உலகக்கோப்பை தொடர் துவங்கும் போது உலகக்கோப்பை வெல்லும் எந்த வாய்ப்பும் இல்லாத அணியாகவே இருந்தது. அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலமான அணிகளாக இருந்தன.
இந்தியா - வெ.இண்டீஸ்
இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு ஒருநாள் போட்டியில் வீழ்த்தி இருந்தது. உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் வீழ்த்தி இருந்தது. எனினும், உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது முறை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் பலம்
இந்திய அணி இரண்டு வெற்றிகள் பெற்று இருந்தாலும், கடந்த இரண்டு முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை வென்ற அணி என்பதால் முன்னிலை பெற்று இருந்தது. அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கூட சரிசமமாக போட்டி போட முடியாத நிலை இருந்தது.
இந்திய அணி சறுக்கல்
இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரீகாந்த் மட்டுமே அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் ஸ்கோர் பார்த்தவுடன் பலரும் வெஸ்ட் இண்டீஸ் வெல்லப் போகிறது என்றே நினைத்தார்கள்.
60 ஓவர்களில் 184 ரன்கள்
இந்திய அணி வீரர்கள் கூட சோர்ந்து போனார்கள். அப்போது ஒருநாள் போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டவை. 60 ஓவர்களில் 184 ரன்கள் இலக்கு. விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக வென்று விடும் என்றே இந்திய வீரர்களும் எண்ணினர்.
கபில் தேவ் பேச்சு
அப்போது ஒரு கேப்டனாக இந்திய வீரர்களை உத்வேகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கபில் தேவ். அப்போது அவர், "நாம் வெறும் 183 ரன்களுக்கு அவுட் ஆகி விட்டோம். ஆனால், நாம் தாக்குப்பிடித்து ஆட வேண்டும். போட்டியை அத்தனை எளிதாக விட்டுக் கொடுக்கக் கூடாது" என அணி வீரர்களிடம் கூறினார்.
இந்திய அணி போராட்டம்
அதை அடுத்து இந்திய அணி போராடத் தயார் ஆனது. மதன் லால், பின்னி, சாந்து அபாரமாக பந்து வீசி டாப் ஆர்டரை சரித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது. அப்போது இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியில் நம்மால் வெற்றி பெற முடியும் என எண்ணினர்.
இந்தியா வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கள் முதல் உலகக்கோப்பையை வென்றது. அந்த வெற்றி தான் இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தது.