நெல்லை: டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சனிக்கிழமை நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை காரைக்குடி காளை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை, தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற காரைக்குடி காளை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது. காரைக்குடி அணியில் பத்ரிநாத் 49 (46) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சந்திரசேகர் கணபதி 28(17) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
துத்துக்குடி அணியில் அஸ்வின் கிரிஸ்ட் 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை சாய்த்தார்.
அடுத்து களம் இறங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அந்த அணியில் கவுசிங் காந்தி 27(29), சுப்ரமணியன் ஆனந்த் 24(34) ரன்கள் எடுத்தனர். காரைக்குடி அணி சார்பில் சந்திரசேகர் கணபதி 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விட்டுக்களை சாய்த்தார். ராஜ்குமார் 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள காரைக்குடி அணி இந்த வெற்றியின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. தூத்துக்குடி அணி 3 போட்டிகளில் விளையாடி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.
சேப்பாக் கில்லீஸ்:
இதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. மழை காரணமாக காலதாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த காஞ்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 11.5 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.