நெல்லை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி காஞ்சி வாரியர்ஸை வீழ்த்தியது.
பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் காரைக்குடி காளை- காஞ்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கவுசிக் 25 ரன்கள் அடித்தார். கேப்டன் இந்திரஜித் 9 ரன்களே அடித்தார். அகில் ஸ்ரீநாத் 17 ரன்களும், வருண் குமார் 15 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது காரைக்குடி காளை. தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்த அந்த அணியை சீனிவாசன்-ஷாஜகான் ஜோடி சரிவில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. சீனிவாசன் அரை சதம் கடந்தார். ஷாஜகான் 32 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சோயிப் முகமது கான் 11 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து சீனிவாசனுடன் சுரேஷ் பாபு இணைய, காரைக்குடி அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சீனிவாசன் 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி காளை அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது. முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்படி, திருநெல்வேலியில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், தூத்துக்குடி அணியும் மோதுகின்றன.
17-ம் தேதி சென்னையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள், சென்னையில் 18-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.