“என்னா மனசுயா உங்களுக்கு”.. ரசிகர்களுக்காக கர்நாடக வாரியம் செய்த விஷயம்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
பெங்களூரு: ரசிகர்களுக்காக கர்நாடக கிரிக்கெட் வாரியம் செய்த ஏற்பாடு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்ற சூழலில் கடைசி போட்டி மட்டும் ரத்து செய்யப்பட்டது.

ஏமாந்த ரசிகர்கள்
இந்திய அணி அட்டகாசமான கம்பேக் கொடுத்திருந்ததால், கடைசிப் போட்டி மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் பெங்களூரு மைதானத்தில் திடீரென மழை குறுக்கிட்டு சொதப்பியது. இரவு 10.10 மணி வரை மழை விடாமல் பெய்து வந்ததால், இப்போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

புதிய அறிவிப்பு
இந்நிலையில் ரசிகர்களுக்காக கர்நாடக கிரிக்கெட் வாரியம் சிறப்பான முடிவை எடுத்துள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பந்து வீசப்பட்டாலும் கூட ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பிக்கொடுக்க விதிகள் இல்லை. ரசிகர்கள் கேட்கவும் முடியாது. ஆனால் ரசிகர்கள் மீதுள்ள அக்கறையால் டிக்கெட் தொகையை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளது.

காரணம் என்ன
இதுகுறித்து பேசிய கர்நாடக கிரிக்கெட் வாரிய பொருளாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் வினய் ம்ருத்தயுஞ்சயா, " ரசிகர்களால் விதிமுறைப்படி கட்டணத்தை திரும்பி கேட்க முடியாது. இருப்பினும் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இருக்கும் அக்கறை காரணமாக கர்நாடக வாரியம் 50 சதவீத கட்டணத்தை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளோம். எனவே டிக்கெட் வாங்கிய அனைத்து ரசிகர்களும் அசல் டிக்கெட்டை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி
பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து இருந்ததால், மழை நீர் உள்ளே நுழைந்து ரசிகர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து வீடியோக்களை பதிவிட்டும் விமர்சனம் செய்திருந்தனர். ஆனால் தற்போது அதே கிரிக்கெட் வாரியம் செய்துள்ள விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications