பிசிசிஐ நடத்தும் பிரதான உள்நாட்டு கிரிக்கெட் ஒரு நாள் தொடர் என்றால் அது விஜய் ஹசாரே கோப்பை தான். இந்த தொடரில் நட்சத்திர வீரர் கருண் நாயர் 8 இன்னிங்ஸில் மொத்தமாக 779 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஐந்து சதம் அடங்கும். சராசரியாக 389 ரன்களை கருண் நாயர் அடித்திருந்தார்.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு இந்திய அணியின் தேர்வு குழு முன்னுரிமை வழங்கியிருந்தது.

இதுவரை கருண் நாயர், இந்திய அணிக்காக இரண்டே இரண்டு ஒருநாள் போட்டிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிராக விளையாடி இருக்கிறார். எட்டு ஆண்டுகளாக அவர் ஒரு நாள் அணியில் இடம் பெற்றது கிடையாது. இந்த நிலையில் இவ்வளவு பெரிய சாதனையை விஜய் ஹசாரே தொடரில் படைத்தும் இந்திய அணியில் இடம் பெற குறித்து கருண் நாயர் தன்னுடைய மௌனத்தை கலைத்திருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், நாம் எப்போது கிரிக்கெட் விளையாடும் போதும் இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைத்தால் நாம் தொடர்ந்து கனவு காண வேண்டும். இந்த கனவும் எண்ணங்களும் இருப்பதால்தான் எனக்கு உத்வேகம் கிடைக்கின்றது.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற மோட்டிவேஷன் உடன் இருக்கின்றேன். இதன் மூலம் ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற பசி எனக்கு இருக்கிறது. நான் இதுவரை அடித்த ரன்களை நினைத்து போதும் என்று மகிழ்ச்சி கொள்ளாமல் ரன்கள் சேர்க்கப் பார்க்கிறேன்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து ஆட்டங்கள் இருப்பதால் நான் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே எனக்கு நேரமில்லை. இருந்தாலும் நான் இந்திய அணியில் விளையாடவில்லையே என்று யோசிக்காமல் இல்லை. அப்படி சொன்னால் அது பொய் தான். ஒவ்வொரு முறையும் சதம் அடிக்கும் போதும் என்ன நடக்கிறது என்று எனக்கே கொஞ்சம் நம்ப முடியாமல் தான் இருந்தது. எனினும் இந்த உணர்வை மீண்டும் மீண்டும் அனுபவிக்க விரும்புகிறேன் என்று கருண் நாயர் கூறியுள்ளார்.