மும்பை: உள்ளூர் போட்டிகளில் அதிக அளவில் ரன் குவித்து இருக்கும் கருண் நாயருக்கு 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் அளிக்காதது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.
இந்திய அளவில் நடைபெற்ற ஒரு நாள் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடரில் கருண் நாயர் 8 இன்னிங்ஸ்களில் 779 ரன்கள் சேர்த்து இருந்தார். அவரது சராசரி 389.5 ஆக இருந்தது. இரண்டு முறை மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார். இதை அடுத்து அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவரை புறக்கணித்து விட்டது. இதை அடுத்து உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்தாலும் இந்திய அணியில் இடம் இல்லை என்றால் எதற்காக உள்ளூர் போட்டியில் ஆட வேண்டும்? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது பற்றி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இது பற்றி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். "ஒரு வீரரின் உள்ளூர் போட்டி ஃபார்ம் மற்றும் செயல்பாட்டை பார்த்து நீங்கள் அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதில் ஏதாவது அர்த்தம் உள்ளதா?" என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சமீபத்தில் பிசிசிஐ இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தான் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறி இருந்தது. அப்படி என்றால் உள்ளூர் போட்டிகள் தான் முக்கியம் என பிசிசிஐ கருதுகிறது. அப்படி இருக்கும்போது உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடும் வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒரே தொடரில் 700 ரன்களுக்கும் மேல் ரன் குவித்தாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் இல்லை என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் பேசி இருந்ததும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.