மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில வீரர்கள் எவ்வளவு சாதனை படைத்தாலும் அவர்கள் இந்திய அணியில் தொடர்ந்து சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார்கள். இந்த சூழலில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்து அசத்திய கருண் நாயர் இந்திய அணியில் அடுத்த ஸ்டார் வீரராக உருவெடுப்பார் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் கருண் நாயர் இந்திய அணிக்காக விளையாடி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் கருண் நாயர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக தற்போது அபாரமான ஆட்டத்தை விளையாடி வருகிறார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் கருண் நாயர் 5 சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மகாராஷ்டிரா அணியை விதர்பா எதிர்கொண்டது. டாஸ் வென்று மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய விதர்பா அணியில் தொடக்க வீரர்கள் துருவ் சோரே 114 ரன்களும், யாஷ் ரத்தோட் 116 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 224 ரன்கள் சேர்த்தது.
இதன் அடுத்து மூன்றாவது வீரராக கேப்டன் கருண் நாயர் களம் இறங்கினார். மகாராஷ்டிரா அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்த அவர் ஐந்து இமாலய சிக்சர், ஒன்பது பௌண்டரிகள் எடுத்து 44 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இறுதியில் ஜித்தேஷ் சர்மா 33 பந்துகளில் 51 ரன்கள் சேர்க்க விதர்பா அணி 50 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 380 ரன்கள் குவித்து இருக்கிறது.
இதன் மூலம் கருண் நாயர் இந்த தொடரில் 752 என்ற சராசரியை வைத்து இருக்கிறார். இந்த தொடரில் அவர் ஒரே ஒரு முறை தான் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாத நிலையில் இந்திய ஒரு நாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது வரலாற்றுப் பிழையாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.