மும்பை: இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு பதிலாக கருண் நாயர் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்திய தொடக்க வீரர்ஷிகர் தவானுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, தவானின் இடது கையை பலமாக பதம் பார்த்தது.
இதையடுத்து காயத்தன்மை குறித்து அறிய அருகில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவின் படி ஷிகர் தவான் 10-15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால், நியூசிலாந்துக்கு எதிராக வரும் 8 ஆம் தேதி இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவான் விளையாட மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக கருண் நாயர் போட்டியில் கலந்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.