லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுத்து கருண் நாயர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்து கருண் நாயர் சாதனை படைத்தார். இதனால் கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் அடுத்த ஸ்டார் வீரராக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று அடுத்தடுத்த தொடர்களில் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதை அடுத்து மீண்டும் அணிக்கு திரும்பிய கருண் நாயர், பல முயற்சிகள் எடுத்தாலும் அது எதுவும் பலனளிக்கவில்லை. அதன் பிறகு ரஞ்சி கோப்பை விஜய் ஹசாரே கோப்பை என அனைத்து தொடர்களிலும் அபாரமாக கருண் நாயர் விளையாடி வந்தார். ரஞ்சி கோப்பையில் 863 ரன்கள் மற்றும் விஜய் ஹசாரே கோப்பையில் 8 இன்னிங்ஸில் 5 சதம் என பட்டையை கிளப்பினார்.

இதன் மூலம் கருண் நாயருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்த தருணத்தில் தாம் அணியில் சேர்க்கப்படாத போது பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தம்மை தொடர்பு கொண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்று விடுங்கள் என்று தம்மை கூறியதாக கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கின்றது. இந்திய அணியின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவர். என்னை தொடர்பு கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் தொடரில் விளையாட சொன்னார்.
"அவர் நல்ல எண்ணத்தில் தான் சொன்னார். இப்படி நான் விளையாடுவதன் மூலம் எனக்கு அதிக அளவு பணம் கிடைக்கும். அதை வைத்து வாழ்க்கையில் நல்ல இடத்திற்கு சென்று விடலாம் என்று சொன்னார். அதை நான் செய்திருந்தால் எனக்கு சுலபமாக இருந்திருக்கும். ஆனால் பணத்தை விட எனக்கு இதுதான் முக்கியம்."
"அந்த சுலபமான வழியை தேர்ந்தெடுத்து இருந்தால், என்னை நான் உதைத்திருப்பேன். நான் இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியாது என்ற எண்ணத்தை என்றுமே என் மனதில் ஏற்றுக் கொண்டதில்லை. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. ஆனால் தற்போது நிலைமை எப்படி மாறி இருக்கிறது என்று பாருங்கள்."
"என் மனதுக்குள் நான் என்றுமே இந்திய அணிக்கு விளையாட தகுதியுடைய வீரர் என்ற எண்ணத்தில் தான் இருந்திருக்கின்றேன்" என்று கருண் நாயர் கூறியிருக்கின்றார். 33 வயதான கருண் நாயர் 2023-24 ஆம் ஆண்டு சீசனில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் நார்த்தம்டான்ஷிர் அணிக்காக விளையாடி 736 ரன்களை குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.