மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் போட்டிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் கிடையாது. எவ்வளவு திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லை என்றால் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினம் தான். இதற்கு எடுத்துக்காட்டாக பல வீரர்கள் இருக்கிறார்கள். இதில் முதன்மையானவர்கள் என்றால் தற்போது 32 வயதாகி இருக்கும் கருண் நாயர் தான்.
இவர் தன்னுடைய 26 ஆவது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஆனால் முச்சதம் அடித்தும் கருண் நாயருக்கு தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக இந்திய அணிக்கு கருண் நாயர் 2017 ஆம் ஆண்டு தான் விளையாடினார்.

இதனால் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வேண்டி போராடி வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கருண் நாயர், ஒவ்வொரு வீரரும் 30 அல்லது 31 வயதில் உச்சத்தை தொடுவார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மை என்று நான் உணர்கிறேன். கடந்த ஒரு ஆண்டாக நான் சிறப்பாக விளையாடி வருகின்றேன்.
மகாராஜா t20 தொடருக்கு பிறகு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் நான் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கின்றேன். தற்போது பல மாதங்களாக நான் வீட்டில் தான் இருக்கின்றேன். வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். எனக்கு எதுவும் சரியாக அமையவில்லை. எது செய்தால் என்னால் மீண்டும் அணிக்கு திரும்ப முடியும் என்று எனக்குள்ளே நான் கேள்வி கேட்டுக் கொண்டேன்.
தற்போது அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்து விட்டதாகவே நினைக்கின்றேன். வாழ்க்கையின் கடினமான காலகட்டங்கள் என்னை இன்னும் சிறப்பாக செயல்பட தான் வைத்திருக்கிறது. நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் முக்கியமான போட்டியாக கருதுகின்றேன். அது சாதாரண லீக் தொடராக இருந்தாலும் சரி ரஞ்சிப் போட்டிகளாக இருந்தாலும் சரி. நான் எதிர்காலத்தை கடந்து யோசிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடினேன்.
என் வாழ்க்கையில் அவ்வளவு குளிரான சூழ்நிலையில் நான் விளையாடியது கிடையாது. என்னால் பேட்டை கையில் பிடிக்கவே முடியவில்லை. எனக்கு அது மிகவும் கடினமாக இருந்தது. எனினும் அதில் நான் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மனநிறவை கொடுத்தது. தற்போது விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் அதிகமாக ரன் சேர்த்து வெற்றி பெற வேண்டும். இங்கிலாந்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தை நான் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தி விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருக்கின்றது.