சென்னை : 2016 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று முச்சதம் (Triple century) அடித்தவர் கருண் நாயர். ஆனால், அதன் பின் அவருக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர் இங்கிலாந்து உள்ளூர் தொடரில் விளையாட சென்று இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் முச்சதம் அடித்த வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே. 2004இல் பாகிஸ்தானிலும், 2008இல் சென்னை சேப்பாக்கத்திலும் வீரேந்தர் சேவாக் முச்சதம் அடித்தார். அதன் பின் எந்த வீரராலும் அந்த சாதனையை செய்ய முடியாது என நினைத்த போது 2016இல் கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் முச்சதம் அடித்தார்.

அதன் பின் கருண் நாயர் இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரிரு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரால் ரன் குவிக்க முடியவில்லை என்பதால் அத்துடன் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பின் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ஆடிய அவருக்கு தற்போது ஐபிஎல் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இடையே ரஞ்சி தொடரில் தன்னை நிரூபித்தும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் மன விரக்தி அடைந்த கருண் நாயர், தற்போது இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆட தயாராகி இருக்கிறார். முன்பு நார்த்தம்டன்ஷயர் கவுன்டி அணிக்காக மூன்று இன்னிங்க்ஸ்களில் 78, 150 மற்றும் 21 ரன்கள் குவித்து இருந்தார். அதே அணி அவரை மீண்டும் ஏப்ரல், மே மாதத்தில் ஏழு கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் ஆட ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது 32 வயதாகும் நிலையில் அவரால் இப்போதும் கூட இந்திய அணிக்கு ஆட முடியும். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. இதை புரிந்து கொண்டு இங்கிலாந்து கவுன்டி போட்டிகளுக்கு தாவி இருக்கிறார் கருண் நாயர். இந்திய டெஸ்ட் அணியின் தூணாக இருந்த புஜாராவுக்கும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. அவரும் இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் ஆடி முடித்த பின் இங்கிலாந்து கவுன்டி தொடரில் ஆட இருக்கிறார்.