லண்டன்: இந்தியா 'ஏ' அணியில் இடம் பெற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இரட்டை சதம் அடித்திருக்கிறார் கருண் நாயர். இதை அடுத்து அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உறுதியாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், அவருக்குப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அளிக்காமல் போகவும் இந்திய அணி நிர்வாகம் திட்டமிடும் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் முச்சதம் அடித்திருந்தார்.

அப்போது வீரேந்தர் சேவாக் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்திருந்த நிலையில், அவருக்கு அடுத்து அந்த ஸ்கோரை எடுத்த ஒரே வீரர் கருண் நாயர் மட்டுமே. ஆனால், அதன் பிறகு அவர் தொடர்ந்து ரன் குவிக்கவில்லை என்ற ஒரு காரணத்தை கூறி இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு வேண்டும் என கருண் நாயர் முறையிட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரஞ்சி டிராபி தொடரிலும் இங்கிலாந்து கவுண்டி டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்து ரன் குவித்து வந்தார் கருண் நாயர்.
அதன் பலனாக தற்போது அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர் மாற்று வீரராக இடம் பிடித்திருக்கிறார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஓய்வு பெற்றதை அடுத்து, கருண் நாயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இங்கிலாந்து தொடருக்கு முன் இந்தியா ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்து இருக்கிறார் கருண் நாயர். ஆனால், அவருக்குப் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோர் முதல் நான்கு இடங்களில் மூன்று இடங்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள். மீதமுள்ள ஒரு இடத்தில் யார் பேட்டிங் செய்யப் போகிறார்கள் என்பதே தற்போதுள்ள கேள்வியாக இருக்கிறது. துவக்க வீரர்களான அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சாய் சுதர்சன் அணியில் உள்ளனர்.
கருண் நாயர் மூன்றாம் வரிசை மற்றும் நான்காம் வரிசைகளில் பேட்டிங் செய்யக் கூடியவர். சாய் சுதர்சனும் முதல் நான்கு வரிசை வரை பேட்டிங் செய்யும் ஆற்றல் உடையவர். அபிமன்யு ஈஸ்வரன் இதுவரை பெரும்பாலும் துவக்க வீரராக மட்டுமே விளையாடி இருக்கிறார். எனவே, இந்த மூவரில் தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த கருண் நாயருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்திய அணி நிர்வாகம் ஏதேனும் ஒரு காரணத்தை வைத்து கருண் நாயரை பின்தள்ளிவிடும் என ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை வெளியிட்டு வருகின்றனர்.