மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் முச்சதம் அடித்து சாதனை படைத்த கருண் நாயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருந்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா ஏ அணியில் கூட அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்தியா 'ஏ' அணி அடுத்து ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

அந்த தொடருக்கான இந்திய ஏ அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் கருண் நாயரின் பெயர் இடம்பெறாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதாகும் கருண் நாயருக்கு இந்திய அணியின் கதவுகள் மூடப்பட்டதற்கான அறிகுறி தான் இது என ரசிகர்கள் கூறத் துவங்கி உள்ளனர்.
கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்குத் திரும்பினார். ஆனால், இந்த வாய்ப்பு அவருக்குச் சாதகமாக அமையவில்லை.
ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், ஒரே ஒரு முறை மட்டுமே 50 ரன்களை கடந்தார். தனது டெஸ்ட் வாழ்க்கையை மீட்டெடுக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பை கருண் நாயர் வீணடித்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் போது கருண் நாயரின் விரலில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காயம் காரணமாக, அவர் மகாராஜா டி20 லீக் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்தியா 'ஏ' அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதற்கு இந்தக் காயம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கருண் நாயரின் காயம் குறித்து எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை.
கருண் நாயருக்குப் பதிலாக, தேர்வாளர்கள் இளம் மற்றும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பிற வீரர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் செப்டம்பர் 16 முதல் 19 வரையிலும், செப்டம்பர் 23 முதல் 26 வரையிலும் நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் அவர் அணியை வழிநடத்துவார்.
இளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான துருவ் ஜுரல், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட அவர், இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, பயிற்சி பெறும் நோக்கில், கே.எல். ராகுல் மற்றும் முகமது சிராஜ் இரண்டாவது போட்டியில் அணியுடன் இணைவார்கள். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட நிதிஷ் குமார் ரெட்டியும் இந்தியா ஏ அணிக்குத் திரும்பியுள்ளார்.
தமிழக வீரர் என். ஜெகதீசன், இந்த ஆண்டு டெஸ்ட் அறிமுக வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட நிலையில் மீண்டும் இந்தியா ஏ அணிக்குத் தேர்வாகியுள்ளார். துலீப் டிராபி அரையிறுதியில் அவர் 197 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. தேவ்தத் படிக்கல், அபிமன்யு ஈஸ்வரன், சாய் சுதர்சன் மற்றும் டெல்லி அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.