மும்பை : பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தினந்தோறும் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு தேவையா என்று விராட் கோலிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய வீரர்கள் கார்னல் மண்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் டோனக் மற்றும் டிஎஸ்பி ஹுமாயூன் ஆகியோர் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக பல ராணுவ வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து மேஜர் பவன் குமார் என்ற ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும் போதெல்லாம் ரசிகர்களுக்கு இந்த உயிரிழந்த ராணுவ வீரர்களின் முகம் நினைவுக்கு வர வேண்டும். பாகிஸ்தானால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி ஏன் விளையாட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ராணுவ வீரர்கள் ஒரு பக்கம் உயிரிழக்கும் நிலையில் விராட் கோலியும், அவரது ரசிகர்களும் பாகிஸ்தான் வீரர்களை கட்டி அணைத்து அவர்களை கொண்டாடும் நிலை ஏன் ஏற்பட்டு இருக்கிறது என்றும் பவன் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் மக்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் இந்த ராணுவ வீரரின் கருத்துக்கு விராட் கோலி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானுடன் எதற்கு இந்திய கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு யார் காரணம். விராட் கோலி தான் பிசிசிஐயின் தலைவராக இருக்கிறாரா? இல்லை விராட் கோலி தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பங்கு வகிக்கிறாரா?
சம்பந்தமே இல்லாமல் விராட் கோலி மீது பழி சுமத்துவது ஏன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் ஒட்டுமொத்த நாட்டையும் பழி சுமத்துவது சரிதானா என்று விராட் கோலி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது உங்களை போல் இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் வருத்தம் தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.