லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதியை அந்த அணி மாற்றியுள்ளது.
தி ஹண்ட்ரட் தொடரின் ஆடவர் அணிக்கான ஏலம் லண்டனில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணை அணியான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பங்கேற்றது. சன் குழுமத்திற்குச் சொந்தமான இந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி காவ்யா மாறன் நேரடியாக இந்த ஏலத்தில் கலந்து கொண்டார். இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணியுடன் கடுமையாகப் போட்டி போட்டு சன்ரைசர்ஸ் அணி இவரைத் தட்டித்தூக்கியது.

ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ20, இதர வெளிநாட்டு டி20 தொடர்களிலும் இந்திய நிறுவனங்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தன. இந்நிலையில் அந்த விதியை உடைத்து, இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு அணி பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. 27 வயதான அப்ரார் அகமது சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாகப் பந்துவீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ரைசர்ஸ் அணி அப்ரார் அகமதுவை எடுத்ததைத் தொடர்ந்து, மற்றொரு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்கை பர்மிங்காம் பீனிக்ஸ் அணி 1,40,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான ஹாரிஸ் ராவுஃப், சைம் அயூப் மற்றும் ஷதாப் கான் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. மேலும், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாகின் அப்ரிடி ஏலம் தொடங்குவதற்குச் சற்று முன்பு தனது பெயரைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். தி ஹண்ட்ரட் மகளிர் ஏலத்திலும் எந்தவொரு பாகிஸ்தான் வீராங்கனையும் தேர்வு செய்யப்படவில்லை என்பது கூடுதல் தகவல்.
