மும்பை: ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.58.2 கோடி ஊதியம் கொடுக்க ஒரு ஐபிஎல் அணி முன் வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அந்த ஐபிஎல் அணி கொடுத்த ஆஃபரை இரு வீரர்களும் வேண்டாம் என்று மறுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 2 மாதங்களில் நடக்க உள்ளது. கடந்த முறை சறுக்கிய அணிகள் இம்முறை மீண்டும் சிறந்த அணியை கட்டமைக்க முயற்சித்து வருகின்றனர். அதேபோல் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் எஸ்ஏ20, ஐஎல்டி20, எம்எல்சி, ஹண்ட்ரட் லீக் உள்ளிட்ட பல்வேறு லீக் தொடர்களிலும் ஐபிஎல் அணிகள் முதலீடு செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

அண்மையில் கூட ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் லக்னோ உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா ஆகியோர் ஹண்ட்ரட் லீக்குகளில் முதலீடு செய்தனர். அதேபோல் மும்பை அணியும் எந்த நாட்டில் லீக் தொடர் நடத்தப்பட்டாலும், அங்கு ஒரு அணியை வாங்கிவிடுகிறது. இந்த அணிகளுக்காக விளையாட நிரந்தர வீரர்களை அந்தந்த அணி நிர்வாகங்கள் தேடி வருகின்றன.
உதாரணமாக ட்ரெண்ட் போல்ட் மும்பை அணி முதலீடு செய்துள்ள அத்தனை லீக் தொடர்களிலும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். கேகேஆர் அணி முதலீடு செய்துள்ள அத்தனை அணிகளிலும் ரஸ்ஸல் மற்றும் சுனில் நரைன் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் தொடர் அல்லாமல் சிஎஸ்கே அணி முதலீடு செய்துள்ள அத்தனை அணிகளிலும் டூ பிளசிஸ் விளையாடி வருகிறார்.
அதுபோல் ஆஸ்திரேலியா வீரர்கள் இருவரை இழுக்க ஐபிஎல் அணிகள் முயற்சித்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டுக்கு ரூ.58.2 கோடி ஊதியமாக அளிக்க முன் வந்துள்ளனர். அதற்கு பதிலாக, தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, தங்கள் அணி முதலீடு செய்துள்ள அணிகளுக்காக விளையாட வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளனர்.
இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வட்டாரத்தையே உலுக்கி இருக்கிறது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், ஆஸ்திரேலியா வீரர்கள் பலரும் வேறு வழியின்றி பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இவ்வளவு பணம் இருந்தால், நிம்மதியாக வாழலாம் என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனையும் ஆஸ்திரேலியா வீரர்கள் சங்கத்தில் நடந்திருக்கிறது.
இறுதியாக பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தங்களின் தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற முடிவில் இருந்து பின் வாங்க மறுத்துள்ளனர். இந்த 2 ஆஸ்திரேலியா வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகின்றனர். இதனால் காவ்யா மாறன் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முன் வந்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.