'தி ஹன்ட்ரட்' தொடருக்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளரை முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதுவை ஒப்பந்தம் செய்தது, இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு மறைமுகமாக நிதியளிக்கும் செயல் அவர் எச்சரித்தார். அப்ராரை விடுவித்து போராட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கவாஸ்கர் வலியுறுத்தினார்.
சன் குழுமத்திற்கு சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ், அப்ரார் அஹ்மதுவை சுமார் ₹2.34 கோடி என்ற தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. பாகிஸ்தானுக்காக 10 டெஸ்ட், 16 ஒருநாள், 38 டி20 போட்டிகள் விளையாடியுள்ள அப்ராரை ஒப்பந்தம் செய்ததிலிருந்து அணி தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

கடந்த ஆண்டு பஹல்காம்தாக்குதலைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்களும், இந்தியா-பாகிஸ்தான் வரலாற்றுப் பிண்ணணியில் இது எதிர்பார்க்கப்பட்டதே என சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டார்.இது குறித்து செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில், "2008 மும்பை தாக்குதல்களுக்கு பின், இந்திய ஃபிரான்சைஸ் உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஐபிஎல் போட்டிகளுக்குத் தவிர்த்து வருகின்றனர்."

"பாகிஸ்தான் வீரர்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் அவர்களின் அரசுக்கு வருமான வரியாகச் சென்று, அது ஆயுதங்கள் வாங்கப்படவும், மறைமுகமாக இந்திய வீரர்கள், பொதுமக்கள் கொல்லப்படவும் பங்களிக்கிறது. இந்த உணர்வு, இந்திய நிறுவனங்கள் பாகிஸ்தான் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களைக் கருத்தில் கொள்வதைத் தடுத்துள்ளது" என்று விளக்கினார்.
சன்ரைசர்ஸ் லீட்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, அப்ரார் மட்டுமின்றி சில பாகிஸ்தான் வீரர்களும் இலக்கில் இருந்ததாகத் தெரிவித்தார். வெட்டோரிக்கு இந்த நிலைப்பாடு முழுமையாகப் புரியாமல் இருக்கலாம் என்றாலும், இந்திய உரிமையாளர்கள் இந்நிலையைப் புரிந்துகொண்டு பாகிஸ்தான் வீரர்களை ஒப்பந்தம் செய்வதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று கவாஸ்கர் வாதாடினார்.
"உரிமையாளர் இந்தியராக இருக்கும் பட்சத்தில், பணம் செலுத்துவது இந்திய நிறுவனம் அல்லது வெளிநாட்டு துணை நிறுவனம் என்றாலும், அவர் இந்தியர்களின் உயிரிழப்புக்குப் பங்களிக்கிறார். இது எளிமையான உண்மை. வேறு எந்த நாடும் விளையாடாத ஒரு தொடரில் வெற்றி பெறுவது, இந்திய உயிர்களை விட முக்கியமானதா?" என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

இந்த "நம்பமுடியாத" ஒப்பந்தத்தால் இந்திய ரசிகர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என முன்னாள் இந்திய கேப்டன் கணித்துள்ளார். சீசன் தொடங்கும் முன்பே அப்ராரை அணியிலிருந்து விடுவிக்குமாறு சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்கு கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்."இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ரசிகர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை. தவறை திருத்த இன்னும் நேரமிருக்கிறது, புத்திசாலித்தனமான ஒரு முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்" என்று கவாஸ்கர் தனது கட்டுரையை முடித்திருந்தார்.