லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், காவ்யா மாறன் உரிமையாளராக இருக்கும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் வீரரை வாங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
தி ஹண்ட்ரட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம், இந்தத் தொடரில் இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு அணியால் வாங்கப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெயரினை அப்ரார் அகமது பெற்றார்.

ஆனால், காவ்யா மாறனின் இந்த அதிரடி முடிவுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தேச உணர்வுக்கு எதிராக பாகிஸ்தான் வீரரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்த சில மணி நேரங்களிலேயே சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. எக்ஸ் தளத்தின் விதிகளை மீறியதற்காக கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், அதற்கான சரியான காரணம் என்னவென்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த இங்கிலாந்து அணியை, கடந்த ஆண்டு சன் டிவி நிறுவனம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமிருந்து முழுமையாக விலைக்கு வாங்கியது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் விளையாடும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய சன் குழுமத்தின் மற்ற அணிகள் இதுவரை எந்த ஒரு பாகிஸ்தான் வீரரையும் ஒப்பந்தம் செய்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏலத்தில் காவ்யா மாறனுடன் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியும் பங்கேற்றார். ஆஸ்திரேலிய வீரர்களிடம் அப்ரார் அகமதுவின் பந்துவீச்சு குறித்து கேட்டறிந்த பிறகே அவரை ஏலத்தில் எடுக்க முடிவு செய்ததாக வெட்டோரி தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுப்பது குறித்து அணி நிர்வாகத்திற்குள் எந்தவிதமான தனி ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஐபிஎல் தொடரில் எதிர்ப்பு கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.