இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹெண்ட்ரட் தொடருக்காக, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹமதை ஒப்பந்தம் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அடில் ரஷித்தை அணியில் பெற முடியாததாலேயே வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி விளக்கமளித்துள்ளார்.
தி ஹண்ட்ரட் ஏலத்தில், இந்திய உரிமையாளருக்குச் சொந்தமான அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமது ஆவார். சன் டிவி குழுமத்திற்குச் சொந்தமான சன்ரைசர்ஸ் லீட்ஸ், அஹமதுவை 255,000 அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்தது. இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

நாட்டு மக்கள் உணர்வுகளைப் புறக்கணித்ததாகக் கூறி, சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் அணியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு காரணமாக, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது. அணியின் தலைமை நிர்வாகம் இதுகுறித்து இன்னும் பேசவில்லை.

எனினும், ஏலத்தின் தேவை மற்றும் அணிக்காக தான் இந்தத் தேர்வு முடிவு எடுக்கப்பட்டதாக பயிற்சியாளர் வெட்டோரி குறிப்பிட்டார். “சௌத் பிரேவ் அணிக்கு அடில் ரஷித் சென்ற பிறகு, வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளரைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் பார்த்த நான்கு அல்லது ஐந்து பேரில் அப்ரார் அஹமதுவும் ஒருவர்,” என்று வெட்டோரி ஏலத்திற்குப் பிறகு தெரிவித்தார்.
“இவரை எங்கள் அணியில் சேர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றும் வெட்டோரி குறிப்பிட்டார். கடந்த ஆண்டு சன் டிவி நெட்வொர்க், நாதர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியை வாங்கியது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து 49% பங்குகளையும், யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் இருந்து மீதமுள்ள 51% பங்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தில் இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான வேறு எந்த அணியும் பாகிஸ்தான் வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவில்லை. முன்னதாக, இந்திய உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் வீரர்களுக்கு மறைமுகத் தடை விதிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பின்னர் எட்டு உரிமையாளர்களும் வெளியிட்ட அறிக்கையில், வீரர்கள் தேர்வு என்பது தகுதி மற்றும் கிரிக்கெட் திறமையின் அடிப்படையிலேயே நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்த வெட்டோரி, ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்ப்பது குறித்து பயிற்சியாளர்களோ அல்லது நிர்வாகமோ ஒருபோதும் விவாதிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.