ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் ஆடி வரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளரான பிரையன் லாராவை மாற்ற அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 14 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 10 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. புதிய கேப்டன் மார்க்ரம் ஐதராபாத் அணிக்கு மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாற்றத்தை கூட கொண்டு வரவில்லை. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.

இதற்கு ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் குழுவும் மறைமுக காரணமாக அமைந்துள்ளது. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டேல் ஸ்டெயின் என்று ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் பயிற்சியாளர் குழுவில் இருந்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இதனால் பயிற்சியாளர் குழுவை மாற்ற ஐதராபாத் அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி பதவியில் இருந்து விலகினார்.
இதன்பின்னர் அந்த இடத்திற்கு பிரையன் லாரா நியமனம் செய்யப்பட்டார். ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக லாரா பணியாற்றிய ஒரே ஆண்டில் அவரை மாற்ற ஐதராபாத் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. அவருக்கு பதிலாக லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை பயிற்சியாளராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவரின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பதில் ஜஸ்டின் லாங்கரை ஒப்பந்தம் செய்தது. இதனால் ஆண்டி பிளவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக உள்ள ஏட்ரியன் பைரல் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இறுதி முடிவை அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் தான் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.