லண்டன்: இங்கிலாந்தின் பிரபலமான 'தி ஹன்ட்ரட்' மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி, சதர்ன் பிரேவ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆல்-ரவுண்டர்களின் அபார ஆட்டத்தால் சூப்பர்சார்ஜர்ஸ் அணி கோப்பையை முத்தமிட்டது.
2026 முதல் தான் காவ்யா மாறனின் அணியாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி களமிறங்க உள்ளது. எனினும், இந்த ஆண்டே ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்த அணிகள் ஹன்ட்ரட் தொடரில் கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப காவ்யா மாறன் 100 சதவீத உரிமையை பெற்று இருக்கும் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி மகளிர் கோப்பையை வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த சதர்ன் பிரேவ் அணியை, ஆரம்பம் முதலே சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் கட்டுக்குள் வைத்தனர். குறிப்பாக, இங்கிலாந்து அணியின் அனுபவ வீராங்கனை கேட் கிராஸ், அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேவ் அணிக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.
அவருடன் இணைந்து ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் அன்னபெல் சதர்லேண்ட் 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சதர்ன் பிரேவ் அணியால் 100 பந்துகளில் 6 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃப்ரெயா கெம்ப் 26 ரன்கள் எடுத்தார்.
116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்கு ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 13 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் ஆட்டமிழந்த பிறகு, ஜோடி சேர்ந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனையான நிக்கோலா கேரி மற்றும் ஆல்-ரவுண்டர் அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த ஜோடி, உடையாத பார்ட்னர்ஷிப்பில் 60 ரன்கள் சேர்த்து அசத்தியது. நிதானமாகவும், அதே சமயம் தேவையான நேரத்தில் அதிரடி காட்டியும் ஆடிய நிக்கோலா கேரி 35 ரன்களுடனும், பந்துவீச்சில் ஜொலித்தது போலவே பேட்டிங்கிலும் கலக்கிய சதர்லேண்ட் 28 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்னும் 12 பந்துகள் மீதமிருந்த நிலையில், சதர்லேண்ட் ஒரு சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் இதே சதர்ன் பிரேவ் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இந்த ஆண்டு கோப்பையை வென்று காவ்யா மாறனின் சூப்பர்சார்ஜர்ஸ் அணி பழிதீர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.