கொச்சி: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது தொடக்க ஆட்டக்காரர் இடம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அழுத்தமான பதிலை அளித்துள்ளார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். இது திடீரென டி20 அணிக்குள் நுழைந்து துணை கேப்டனாகி, சஞ்சு சாம்சனின் துவக்க வீரர் வாய்ப்பையும் பறிக்க இருக்கும் சுப்மன் கில்லுக்கு விடுத்த நேரடி சவாலாக அமைந்தது.
கேரள கிரிக்கெட் லீக் (KCL) தொடரில் நேற்று மிடில் ஆர்டரில் களமிறங்கி 22 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பிய சாம்சன், இன்று தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி 51 பந்துகளில் 121 ரன்கள் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கொச்சி ப்ளூ டைகர்ஸ் மற்றும் ஏரிஸ் கொல்லம் செய்லர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி, 236 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணிக்காக, சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார்.
தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சாம்சன், கொல்லம் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து மிரட்டிய அவர், 42 பந்துகளில் சதத்தை எட்டி அசத்தினார். இறுதியில் 51 பந்துகளைச் சந்தித்த அவர், 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய போட்டியில் 6-வது வீரராகக் களமிறங்கி ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 13 ரன்களில் ஆட்டமிழந்த சாம்சன், ஒரே நாளில் தனது பேட்டிங் வரிசையை மாற்றி, தொடக்க வீரராகத் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த அதிரடி சதத்தால், கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்திய டி20 அணியில் சுப்மன் கில் இல்லாத நேரத்தில் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி, ஒரே ஆண்டில் மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்தார் சாம்சன். ஆனால், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்பட்டு, துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், சாம்சனின் தொடக்க வீரர் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.
சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மாவே ஆசியக் கோப்பையில் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள் என்றும், சாம்சன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படலாம் அல்லது ஆடும் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனக்கு மிகவும் பிடித்தமான தொடக்க ஆட்டக்காரர் இடத்தில் களமிறங்கி, ஒரு அதிரடியான சதத்தை விளாசியதன் மூலம், ஆசியக் கோப்பையில் தொடக்க வீரருக்கான போட்டியில் தானும் இருப்பதாக தேர்வாளர்களுக்கு சஞ்சு சாம்சன் செய்தி அனுப்பியுள்ளார்.