அப்பாடா… காயம் சரியாயிருச்சு..! உலக கோப்பையில் இணையும் இந்தியாவின் முக்கிய வீரர்… ரசிகர்கள் ஹேப்பி
மும்பை:காயத்தில் இருந்து மீண்டுள்ள கேதர் ஜாதவ், உடல்தகுதியுடன் உள்ளதால் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இணைகிறார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கோலி, விஜய் ஷங்கர், தோனி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்திய அணி 22ம் தேதி இங்கிலாந்து செல்ல இருக்கிறது. 24ம் தேதி அங்கு பயிற்சிப் போட்டிகள் தொடங்குகின்றன.

தோள்பட்டையில் காயம்
இதனிடையே உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதர் ஜாதவ், ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். எனவே, ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு தீவிர சிகிச்சை மற்றும் ஓய்வும் அளிக்கப்பட்டது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் கவலை
இதனால் அவர் உலககோப்பையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்ததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். அவர் விளையாடாத பட்சத்தில், ராயுடு, ரிஷப் பன்ட் உள்ளிட்ட வீரர்களை பரிசீலிக்கலாம் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

உடல்நிலை முன்னேறியது
இந்நிலையில் கேதர் ஜாதவின் உடல்நிலை சீரடைந்துள்ளது. அவருடைய உடல்நிலையை தீவிரமாக கவனித்து வந்த இந்திய அணியின் பிசியோ தெரபிஸ்ட் பர்ஹர்ட், கேதர் காயத்திலிருந்து மீள்வதற்கான பல பயிற்சிகளை வழங்கினார்.

இங்கி. பயணம்
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில், அவர் தேர்ச்சி பெற்றிருக்கிறார். தற்போது கேதர் ஜாதவ், பூரணமாக குணமடைந்து விட்டதால், 22ம் தேதி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்ல இருக்கிறார். உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்ட இந்த விவகாரத்தில் தற்போது அந்த நிலை மாறி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications