ஏன் ஜாதவ் இல்லை?
கேதார் ஜாதவ் காயத்தில் இருந்து மீண்டு வந்து அனைத்து உடற் தகுதி தேர்வுகளிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது தியோதர் ட்ராபி தொடரில் ஒரு போட்டியில் ஆடி தன் உடற்தகுதியையும், பார்மையும் நிரூபித்து விட்ட நிலையில், அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், அந்த கேள்விக்கு வழக்கம் போல மொக்கையாக பதில் அளித்து உள்ளார்.
அந்த மொக்கை காரணம்
இந்த புகாருக்கு பதில் அளித்த இந்திய அணி தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத், "நாங்கள் கேதார் ஜாதவை தேர்வு செய்யாமல் விட்டதற்கு காரணம், அவரது உடற்தகுதி வரலாறு தான். அவர் சில சமயங்களில் தகுதியோடு வந்து மீண்டும் காயம் பட்டு வெளியேறி இருக்கிறார். கடைசியாக ஆசிய கோப்பையில் கூட இது தன் நடந்தது" என ஒரு மொக்கை காரணத்தை கூறி இருக்கிறார். இந்திய அணியில் வீரர்கள் உடற்தகுதியை நிரூபித்த பின்னரே தேர்வுக் குழு அவர்களை பரிசீலிக்கும் என சில வாரங்கள் முன்பு இவரே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதியில் சேர்த்து விடுவோம்
"உண்மையில், அவர் இந்தியா "ஏ" அணிக்காக இன்னொரு போட்டியில் ஆடினார் என்றால் அவரது தகுதியை நாங்கள் மதிப்பிட்டு விடுவோம். ஒருவேளை, நான்காவது போட்டிக்கு அவரை கூடுதலாக அணியில் சேர்க்க கூட வாய்ப்புள்ளது" என நேரடியாக காரணத்தை சொல்லாமல் பாதி தொடரில் சேர்த்து விடுவோம் என சமாளித்து இருக்கிறார். ஏற்கனவே, 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை தேர்வு செய்து விட்ட நிலையில், கேதார் ஜாதவை அணியில் இணைத்தாலும், கருண் நாயர், மனிஷ் பாண்டே போல பெஞ்சில் உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
அணித் தேர்வு செய்வது யார்?
இந்திய அணியை தேர்வு செய்வது யார் என பலருக்கும் தெரியும். அவர்கள் கூறியதால் கேதார் ஜாதவ் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது உள்ள தேர்வுக் குழுவானது, மிகவும் கிரிக்கெட் அனுபவமற்ற தேர்வுக் குழு, இந்த குழுவால் ரவி சாஸ்திரி, கோலியை எதிர்த்து பேச முடியாது என முன்னாள் வீரர் கிர்மானி கூறி இருந்தார் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.