உடற்தகுதி பரிசோதனை
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கேதார் ஜாதவ் தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்டார். எனினும், அடுத்து பயிற்சிகள், உடற்தகுதி தேர்வுகள் பெற்று தேறிய அவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் தொடரில் ஆடுமாறு இந்திய அணி தேர்வாளர்களால் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் உடற்தகுதியை பரிசோதிக்கவே அவரை உள்ளூர் தொடரில் ஆடுமாறு கூறியதாக தெரிகிறது.
பார்மை நிரூபித்தார்
இந்நிலையில், தியோதர் ட்ராபி தொடரில் பாதியில் நுழைந்த கேதார் ஜாதவ் இந்தியா "ஏ" அணிக்காக ஒரு போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில், ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். மேலும், பந்துவீச்சில் ஐந்து ஓவர்கள் வீசினார். எல்லாம் சரியாக சென்றும், அவரது பெயர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.
விரக்தியில் ஜாதவ்
ஆசிய கோப்பை தொடரில் தன் ஆல்-ரவுண்டர் பணியை சிறப்பாக செய்த ஜாதவ், அடுத்து நேரடியாக பங்கேற்ற உள்ளூர் தொடரில் சிறப்பாக ஆடி தன் பார்மையும், உடற்தகுதியையும் நிரூபித்து விட்டார். எனினும், அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. ஏன் அணியில் சேர்க்கவில்லை என தெரியுமா என ஜாதவிடம் கேட்டதற்கு, அவர் தான் இனிமேல் தான் இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது தான் என்ன செய்வது என்று புரியவில்லை. அடுத்து ரஞ்சி தொடரில் தான் ஆடவேண்டும் என கூறியுள்ளார். அவரது பேச்சில் விரக்தி மட்டும் தான் தெரிகிறது.
வீரர்கள் புகார்
ஒரு வீரரை அணியில் இருந்து நீக்கும் போது அவரிடம் என்ன காரணத்திற்காக நீக்கினோம் என தேர்வாளர்கள் கூறுவதில்லை என புகார் கூறப்படுகிறது. சமீபத்தில் கருண் நாயர், முரளி விஜய் ஆகியோர் இந்த புகாரை கூறி இருந்தனர். இந்நிலையில், கேதார் ஜாதவும் காரணம் சொல்லப்படாமல் நீக்கப்பட்டுள்ளார்.
மறுபடியும் முதல்ல இருந்து
கேதார் ஜாதவ் கூறுகையில், "நல்ல பார்மில் இருக்கும் போது காயம் ஏற்பட்டாலும், மீண்டு வரும் போது அணியில் சேர மறுபடியும் முதலில் இருந்து துவங்க வேண்டும். இது வலிக்கும். ஆனால், இதை ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டியது தான்" என வருத்ததுடன் கூறினார்.