அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விஷ்ணு வினோத், புதுச்சேரி அணிக்கு எதிராக பட்டையை கிளப்பியுள்ளார். 84 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து தனது அணிக்கு அபார வெற்றியைத் தேடித் தந்ததுடன், இத்தொடர் வரலாற்றில் 100 சிக்சர்கள் அடித்த தனிப்பட்ட மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 248 ரன்கள் என்ற இலக்கை கேரளா அணி துரத்தியது. வலுவாகக் களமிறங்கிய வினோத், புதுச்சேரி பந்துவீச்சை அடியோடு சிதைத்தார். வெறும் 63 பந்துகளில் சதம் அடித்து தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

வலது கை பேட்ஸ்மேனான வினோத், 13 பவுண்டரிகளை விளாசியதோடு, 14 சிக்சர்களையும் எளிதாகப் பறக்கவிட்டார். சதம் எட்டிய பிறகும் அவரது வேகம் குறையவில்லை; அடுத்த 50 ரன்களை வெறும் 18 பந்துகளில் எடுத்தார். மொத்தமாக 81 பந்துகளில் 150 ரன்களை எட்டி அசத்தினார்.
லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட்டில் ஓர் இந்தியரால் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது அதிவேக 150 ரன்கள் இதுவாகும். இந்தச் சாதனையால், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்களின் பட்டியலில் வினோத் இணைந்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் 14 சிக்சர்களை விளாசிய விஷ்ணு வினோத், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் 100 சிக்சர்கள் அடித்த மைல்கல்லை அடைந்தார். இந்த 50 ஓவர் போட்டி வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மணிஷ் பாண்டே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அடங்கிய பட்டியலில் இணைந்து, இப்போது கெய்க்வாட்டை சிக்சர்கள் எண்ணிக்கையில் முந்தியுள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில், மணிஷ் பாண்டே (108), விஷ்ணு வினோத் (106), ருதுராஜ் கெய்க்வாட் (105) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். யூசுப் பதான் (91) மற்றும் இஷான் கிஷன் (85) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
போட்டியின் ஆரம்பத்தில் கேரளா அணி சிறிது தடுமாறியது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ரோஹன் குன்னுமல் முதல் ஐந்து ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து, அணியை சற்று நெருக்கடிக்கு உள்ளாக்கினர். இருப்பினும், விஷ்ணு வினோத், அனுபவமிக்க பாபா அபராஜித்துடன் இணைந்து, ஆட்டத்தின் போக்கையே அடியோடு மாற்றினார்.
விஷ்ணு வினோத் மற்றும் பாபா அபராஜித் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 222 ரன்கள் குவித்தனர். இந்த பார்ட்னர்ஷிப், கேரளா அணி வெறும் 29 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற உதவியது. 186 பந்துகள் மீதியிருக்க, கேரளா அபார வெற்றியைப் பதிவு செய்தது.