திருவனந்தபுரம்: கிரிக்கெட் சூதாட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு தொடர்பு உள்ளதற்கு ஆதாரம் இல்லை என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்த நிலையில், அவர் மீதான ஆயுட்கால தடையை விலக்கிகொள்ள பிசிசிஐயிடம் கேரள கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள்விடுக்க உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த விசாரணை முடிந்து சமீபத்தில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஸ்ரீசாந்த் உட்பட கைதான மூவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனிடையே, ஸ்ரீசாந்த் கைதானதை தொடர்ந்து, அவருக்கு கிரிக்கெட் விளையாட பிசிசிஐ ஆயுட்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை விலக்கிக்கொள்ள கேரள கிரிக்கெட் சங்கம் கோரிக்கைவிடுக்க முடிவு செய்துள்ளது. கேரள கிரிக்கெட் சங்க தலைவர் மாத்யூதான் தற்போது பிசிசிஐ துணை தலைவராகவும் உள்ளார்.
கேரள கிரிக்கெட் சங்க செயலாளர் அனந்தநாராயணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "ஸ்ரீசாந்த் மீதான தடையை விலக்க வேண்டும் என்று பிசிசிஐயிடம் கோரிக்கை வைக்கப்படும்" என்றார்.
பிசிசிஐ உயர் அதிகாரிகளை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்த கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் குழு மும்பை செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசாந்த் மீதான தடை தொடரும் என்று பிசிசிஐ சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.