கேரளத்தின் புதிய நாயகன்.. இனி கொண்டாட்டம்தான்.. சஞ்சு சாம்சனை வரவேற்க தயாராகும் கடவுளின் தேசம்
கொச்சின்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியில் முக்கியப் பங்காற்றிய கேரளாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு, திருவனந்தபுரத்தில் மாநில அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தித் தொடர் நாயகன் விருது வென்ற அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ வரவேற்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனை கௌரவிக்கும் விதமாக, தலைநகர் திருவனந்தபுரத்தில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கேரள மாநில பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் வி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞம் என்ற கடலோரப் பகுதியைச் சேர்ந்த சஞ்சு சாம்சன், தனது ஆட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள மக்களுக்கும் பெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார் என்று அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநில அரசு சார்பில் நடத்தப்படும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சறுக்கல்களில் இருந்து மீண்ட பயணம்
இந்த உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சனின் பயணம் மிகவும் சவாலானதாகவே அமைந்திருந்தது. தொடக்கப் போட்டிகளுக்கான விளையாடும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் குறைவான ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் அவர் இந்திய டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆனால், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகச் சஞ்சு சாம்சனுக்கு எதிர்பாராத விதமாக வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு டி20 உலகக்கோப்பை தொடரில் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்ட அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். நெருக்கடியான நேரத்தில் அவர் வெளிப்படுத்திய இந்த நிதானமான ஆட்டம் இந்திய அணியைத் தொடரில் தக்கவைத்தது.
தொடர் நாயகன் விருது
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்களும் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு அவர் முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 321 ரன்களைக் குவித்துள்ளார். அவரது இந்தச் சிறப்பான செயல்பாட்டிற்காக அவருக்குத் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
விருது பெற்ற பிறகு பேசிய சஞ்சு சாம்சன், உலகக் கோப்பையை வென்றது ஒரு கனவு போல இருப்பதாகவும், தனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பல ஆண்டுகளாகத் தனது திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்காமல் காத்திருந்த அவருக்கு, இந்த உலகக் கோப்பைத் தொடர் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது இந்தச் சாதனைகளைக் கொண்டாடும் விதமாகவே கேரள அரசு இந்தச் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications