மும்பை: இந்தியாவின் முதன்மையான உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி, இந்திய வீரர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முக்கிய அரங்கமாக விளங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கப் போராடும் இளம் வீரர்கள் முதல், தேசிய அணியில் இடமில்லாத மூத்த வீரர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்பார்கள்.
ஆனால், ஒரு காலத்தில் இந்தத் தொடர் இந்திய வீரர்களுக்கு மட்டுமேயானதாக இருக்கவில்லை என்பது பலரும் அறியாத ஒரு சுவாரஸ்யமான வரலாறு. ஆம், கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட பல வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்களும் துலீப் டிராபியில் களம் கண்டுள்ளனர்.

2000-களில் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்கவும், பிசிசிஐ ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டது. அதன்படி, வெளிநாட்டு 'ஏ' அணிகள் அல்லது கிரிக்கெட் வாரியத் தலைவர் XI அணிகளை துலீப் டிராபியில் பங்கேற்க அழைத்தது.
அந்த வகையில், இங்கிலாந்து (இரண்டு முறை), வங்கதேசம், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் அணிகள் துலீப் டிராபியில் விளையாடியுள்ளன. அப்படி விளையாடிய சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து ஏ, 2004): இங்கிலாந்தின் அதிரடி ஜாம்பவானான கெவின் பீட்டர்சன், 2004-ம் ஆண்டு துலீப் டிராபியில் இங்கிலாந்து 'ஏ' அணிக்காக விளையாடினார். வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், இரண்டு சதங்களுடன் 345 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். தெற்கு மண்டலத்திற்கு எதிராக 104, 115 ரன்களும், கிழக்கு மண்டலத்திற்கு எதிராக 32, 94 ரன்களும் விளாசினார்.
ரங்கனா ஹெராத் (இலங்கை ஏ, 2006): இலங்கை சுழற்பந்துவீச்சின் ஜாம்பவானான ஹெராத், 2006-ல் இலங்கை 'ஏ' அணிக்காக விளையாடினார். அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் 73 ரன்கள் பங்களித்தார்.
ஜொனாதன் டிராட் (இங்கிலாந்து லயன்ஸ், 2008): இங்கிலாந்தின் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக விளங்கிய ஜொனாதன் டிராட், 2008-ல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் ஆடி 92 ரன்கள் எடுத்தார்.
ஹாமில்டன் மசகட்சா (ஜிம்பாப்வே XI, 2005): ஜிம்பாப்வேயின் நீண்ட கால வீரரான ஹாமில்டன் மசகட்சா, 2005-ல் ஜிம்பாப்வே கிரிக்கெட் யூனியன் பிரசிடென்ட் XI அணிக்காக இரண்டு போட்டிகளில் 183 ரன்கள் குவித்தார்.
மான்டி பனேசர் (இங்கிலாந்து லயன்ஸ், 2008): இந்திய வம்சாவளி இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளரான மான்டி பனேசர், 2008-ல் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக விளையாடி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
தில்லான் சமரவீரா (இலங்கை ஏ, 2006): இலங்கை 'ஏ' அணியின் கேப்டனாக செயல்பட்ட தில்லான் சமரவீரா, அந்தத் தொடரில் மூன்று போட்டிகளில் 161 ரன்கள் எடுத்தார். இவரது தலைமையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இலங்கை 'ஏ' அணி, வடக்கு மண்டலத்திடம் தோல்வியடைந்தது.
இவர்களைத் தவிர, இங்கிலாந்தின் ஆதில் ரஷித், மாட் பிரையர், லியாம் பிளங்கெட், ஜிம்பாப்வேயின் பிரண்டன் டெய்லர், வங்கதேசத்தின் முகமது அஷ்ரஃபுல் போன்ற பல சர்வதேச வீரர்களும் துலீப் டிராபியில் பங்கேற்று விளையாடி உள்ளனர். தற்போதுள்ள இந்திய அளவில் மண்டல அணிகளுக்கு இடையே மட்டுமே துலீப் டிராபி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.