டெல்லி : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்த கிரிக்கெட் தொடருக்கு காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் பேசுவதாக ஒரு தொலைபேசி ஆடியோ பதிவு ஒன்றை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இதுவரை நடந்த உலகக்கோப்பை தொடர்களை காட்டிலும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
குஜராத்தில் உள்ள உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அந்த முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியும் ஆட உள்ளது. அதனால், எந்த சர்ச்சையும், பிரச்னையும் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போது காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னு உலகக்கோப்பை நடக்காது என எச்சரிக்கை அனுப்பி உள்ளார்.
அவர் பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோவில், "ஷாஹீத் நிஜ்ஜார் படுகொலையில், நாங்கள் உங்கள் புல்லட்டுக்கு எதிராக வாக்குச் சீட்டைப் பயன்படுத்தப் போகிறோம். உங்கள் வன்முறைக்கு எதிராக வாக்களிக்கப் போகிறோம். இந்த அக்டோபரில் இது உலகக் கோப்பையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது உலக பயங்கரவாதக் கோப்பையின் தொடக்கமாக இருக்கும். சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் பொதுக்குழுவின் குர்பத்வந்த் சிங் பண்ணுவிடமிருந்து இந்த செய்தி வந்துள்ளது" என்று பன்னு கூறியது இடம் பெற்றுள்ளது.
இந்த எச்சரிக்கை கனடாவில் காலிஸ்தானி தீவிரவாத தலைவர் ஷாஹீத் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இந்த எச்சரிக்கையால் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். ஏதேனும் வெளிநாட்டு வீரருக்கு ஆபத்து ஏற்பட்டால், அது சர்வதேச பிரச்சனையாக மாற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.