பார்படோஸ்: மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆல்-ரவுண்டரும், டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான கீரான் பொல்லார்ட், சனிக்கிழமை அன்று ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். 2025 கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2025 தொடரின் 16-வது போட்டியில், பார்படாஸ் ராயல்ஸ் அணிக்கு எதிராக டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காகக் களமிறங்கியது. இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங் செய்த போது பொல்லார்ட் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு, 14,000 ரன்களை எட்ட அவருக்கு 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதைச் சரியாகப் பூர்த்தி செய்த அவர், 9 பந்துகளில் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து, இந்த வரலாற்று மைல்கல்லைத் தொட்டார்.
கிறிஸ் கெய்லுக்குப் பிறகு பொல்லார்ட்
இந்தச் சாதனையை எட்டிய முதல் வீரர், 'யூனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் சக மேற்கிந்திய தீவுகள் வீரரான கிறிஸ் கெய்ல் ஆவார். அவர் 463 போட்டிகளில் 14,562 ரன்கள் குவித்துள்ளார். பொல்லார்ட், 712 போட்டிகளில் 14,000 ரன்களை எட்டியுள்ளார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது நீண்ட கால ஆதிக்கத்தையும், நிலையான திறனையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
38 வயதான பொல்லார்ட், டி20 கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் 64 அரை சதங்களை அடித்துள்ளார். உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பங்கேற்று, தனது அதிரடியான பினிஷிங் திறமையால் பல போட்டிகளைத் தனியாளாக வென்று கொடுத்தவர்.