ஜாம்நகர் : அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிஎஸ்எல் தொடரில் விளையாடி வரும் பொல்லார்ட் ஒரு போட்டியில் இருந்து விலகியது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 13 சீசன்களில் விளையாடி 5 முறை கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தவர் பொல்லார்ட். அதன்பின்னர் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பொல்லார்ட் பணியாற்றி வருகிறார். இதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் வெவ்வேறு அணிகளான எமிரேட்ஸ், நியூ யார்க் மற்றும் கேப்டவுன் ஆகிய அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் பிஎஸ்எல் தொடரில் பொல்லார்ட் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் பிஎஸ்எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்த்து கட்டா கிளாடியேட்டர்ஸ் அணி மோதவுள்ளது. இந்த சீசனில் மட்டும் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக 5 போட்டிகளில் களமிறங்கி 196 ரன்களை விளாசியுள்ளார்.
அந்த அணியின் முக்கிய வீரராக பொல்லார்ட் மாறியுள்ள நிலையில், திடீரென இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கான காரணம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில ஜாம் நகரில் முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டிற்கு திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடக்கவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று தோனி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பாண்டியா சகோதரர்கள், போல்ட், சாம் கரண், ஜாகீர் கான், இஷான் கிஷன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இருப்பினும் பிஎஸ்எல் தொடரில் விளையாடி வருவதால் பொல்லார்ட் வர மாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் உடனடியாக அணி நிர்வாகத்திடம் முடிவை கூறிவிட்டு குஜராத் வந்துள்ளார் பொல்லார்ட். அவர் மட்டுமல்லாமல் மனைவி ஜென்னாவுடன் ஜாம் நகரில் நடைபெற்ற பார்ட்டியில் பொல்லார்ட் பங்கேற்றார். பிஎஸ்எல் தொடரை விடவும் அம்பானி வீட்டின் நிகழ்ச்சியே முக்கியம் என்று பொல்லார்ட் வந்திருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.