
வளர வேண்டும் ரிஷப்
ரிஷப் பண்ட் இங்கிலாந்து தொடரின் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அதில் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்க்ஸில் சதம் அடித்து ஒரே நாளில் ஹீரோவாக மாறிவிட்டார் ரிஷப் பண்ட். எனினும், அவரது விக்கெட் கீப்பிங் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை. அவர் இன்னும் வளர வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது.

அவசர அரைகுறை பயிற்சி
இங்கிலாந்து தொடர் முடிந்த உடன் மூன்று நாட்கள் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரேவிடம் பயிற்சி பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். இந்த பயிற்சிக்கு ரவி சாஸ்திரி, பிசிசிஐ அதிகாரியாக இருக்கும் சபா கரீம் ஆகியோர் ஏற்பாடு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிரண் மோரே தற்போது பிசிசிஐ-க்கு கீழே இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளூர் மற்றும் முதல் தர போட்டிகளில் ஆடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி அளித்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் துவங்கும் முன்பு, அவசர அவசரமாக மூன்று நாட்கள் அரைகுறை பயிற்சியில் கிரண் மோரேவின் யோசனைகளை கேட்டுக் கொண்டுள்ளார் ரிஷப் பண்ட்.

யாருக்கு வாய்ப்பு அதிகம்?
இதை ஏன் ரகசியமாக செய்ய வேண்டும்? இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக தோனிக்கு பின் விரிதிமான் சாஹா இருந்து வந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சென்றால் அந்த இடத்தை நிரப்ப இருக்கும் ஒரே நபர் தினேஷ் கார்த்திக் தான். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக்கும், அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டும் அணியில் இணைந்தனர். தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் மற்ற பேட்ஸ்மேன்கள் போலவே சொதப்பினார். எனவே, முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய தினேஷுக்கு பதில் அடுத்த மூன்று போட்டிகளில் ஆடினார் ரிஷப் பண்ட். அந்த மூன்றில் கடைசி போட்டியின், கடைசி இன்னிங்க்ஸில் சதம் அடித்தார். ரிஷப்புக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திட்டம் என்ன?
இப்போது மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இரண்டு விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யபட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மட்டுமே அணியில் இருக்கிறார். அவர் அணியில் தேர்வு செய்யப்படும் முன்பே பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். இதில் இருந்தே அவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறப் போகிறார் என்பது முன்பே சிலரால் உறுதியாகி உள்ளது. ஒருவேளை ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினால் தினேஷ் கார்த்திக்கை மீண்டும் அணிக்குள் கொண்டு வர வேண்டும். அதை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தே அவரை நீக்குவது என "யாரோ" முடிவு செய்து இருக்கிறார்கள். அடுத்து, ரிஷப் பண்ட் பலமில்லாத வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நன்றாக ரன் குவித்துவிட்டால் அதை வைத்தே அவரை அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள் என நினைக்க தோன்றுகிறது.

கேள்விகளுக்கு பதில் உண்டா?
ரிஷப் பண்ட் மீது காட்டும் அக்கறையை, பேட்டிங்கில் சொதப்பும் தினேஷ் கார்த்திக் மீது காட்டலாமே? அவருக்கு சிறப்பு பயிற்சியாளர் வைத்து ரகசியமாக மூன்று நாட்கள் பேட்டிங் பயிற்சி அளிக்கலாமே? தாங்கள் செய்வது தவறு இல்லை என்றால் பகிரங்கமாக ரிஷப் பண்ட்டுக்கு கீப்பிங் பயிற்சி அளிக்கலாமே?


Click it and Unblock the Notifications