மும்பை: ஏசியம் கேம்ஸ்-க்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மகிழ்ச்சியில் இளம் வீரர் ரிங்கு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடர் மூலம் விளம்பரம் தேடும் வீரர்களுக்கு மத்தியில் ஐபிஎல் தொடருக்கே பெரும் விளம்பரத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்தியவர் ரிங்கு சிங். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி ரசிகர்களுக்கு எளிதில் கிடைக்காத கொண்டாட்டத்தை விருந்தாக்கினார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் இருக்கும் வீரர் டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று பாடமே எடுத்துவிட்டார் ரிங்கு சிங்.

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் 4 அரைசதங்கள் உட்பட 474 ரன்களை விளாசி தள்ளினார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் 59.25 சராசரியில் 149.53 ஸ்ட்ரைக் ரேட்டில் ரிங்கு சிங் விளையாடி அசத்தியுள்ளார். முதல்தர கிரிக்கெட், ரஞ்சி கிரிக்கெட், சையத் முஷ்டாக் அலி என்று அனைத்து வகையான உள்ளூர் போட்டிகளில் ரிங்கு சிங் சிறப்பாக ஆடியிருப்பதால், நிச்சயம் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில், ரிங்கு சிங்கிற்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கேற்ப ஏசியன் கேம்ஸ் போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பலரும் ரிங்கு சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு தேர்வானது குறித்து இளம் வீரர் ரிங்கு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், கொல்கத்தா அணியின் ஜெர்சி அணிந்த ரிங்கு சிங்கும், இந்திய அணியின் ஜெர்சி அணிந்து ஆடவுள்ள ரிங்கு சிங்கையும் இணைத்து ஒரே புகைப்படத்தில் "இறுதியாக" என்று பதிவிட்டுள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.