கொல்கத்தா: ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சுற்றி ஒரு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை ₹9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததையடுத்து, கேகேஆர் அணிக்கு தினசரி அச்சுறுத்தல்களும், புறக்கணிப்புக்கான அழைப்புகளும் விடப்பட்டு வருகின்றன.
முஸ்தஃபிசுர் ரஹ்மான், வங்கதேசத்திற்காக 257 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், எட்டு ஐபிஎல் சீசன்களிலும் விளையாடியுள்ளார். இருப்பினும், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் தாக்குதல்கள் குறித்த சமீபத்திய செய்திகளால் இந்தியக் குழுக்களிடையே பங்களாதேஷ் விரோத உணர்வு அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பங்களாதேஷ் வீரரை அணியில் சேர்ப்பது பொருத்தமற்றது என இந்த உணர்வு கொண்டவர்கள் வாதிடுகின்றனர்.

இந்த எதிர்ப்பானது பல வழிகளில் வெளிப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சங்கீத் சோம் போன்ற இந்திய அரசியல் தலைவர்கள், ஷாருக் கானை கடுமையாக சாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்களை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில், #BoycottKKR மற்றும் #BoycottIPL போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் அணி மற்றும் ஒட்டுமொத்தப் போட்டியையும் புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மதத் தலைவர்கள், முஸ்தஃபிசுர் ரஹ்மான் கேகேஆர் அணிக்காக களமிறங்கினால், மைதானங்களுக்குள் அத்துமீறி நுழைந்து ஆடுகளங்களைச் சேதப்படுத்துவோம் என்று சபதம் செய்துள்ளனர். இந்த அச்சுறுத்தல்களும் அரசியல் அறிக்கைகளும் சமூக ஊடகங்களில் கடுமையாகப் பரப்பப்பட்டு, இச்சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இந்த எதிர்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து கேகேஆர் அணி, பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்கவில்லை. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, "இது ஒரு நுட்பமான சூழ்நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இராஜதந்திர ரீதியில் உருவாகும் சூழ்நிலைகள் குறித்து நாங்கள் எப்போதும் அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கிறோம். பங்களாதேஷ் வீரர்களைத் தடை செய்ய வேண்டும் என்று எங்களைத் தூண்டும் எதையும் நாங்கள் கேட்கவில்லை. எனவே, ஆம், முஸ்தஃபிகுர் ஐபிஎல் விளையாடுவார். பங்களாதேஷ் ஒரு எதிரி நாடு அல்ல" என்று கூறியுள்ளார்.
கேகேஆர் அணியின் பந்துவீச்சு வரிசையின் பலத்தைக் கருத்தில் கொண்டால், ரஹ்மான் மிகக் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளது. மேலும், ஏப்ரல் 16 முதல் 23 ஆம் தேதி வரையிலான போட்டிகளை அவர் தவறவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் ஏலத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்தது. தற்போது, இந்த செய்தி எல்லாம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட பிறகும் காயம் அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய சம்பவங்கள் உண்டு. ஆனால், ஒரு குறிப்பிட்ட வீரரை ஏலத்தில் எடுத்த பிறகு, எந்த அணியும் அவரைப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது இல்லை. மருத்துவ காரணங்களைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் ஒரு வீரர் ஐபிஎல் தொடரைத் தவறவிட்டால், அவர் அடுத்த இரண்டு சீசன்களுக்குத் தடை செய்யப்படுவார் என்பது பிசிசிஐ விதிகளாகும்.