மும்பை: ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக கேகேஆர் அணி தரப்பில் 2 இந்திய வீரர்களை கொடுக்க கேகேஆர் அணி ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ரகுவன்ஷி மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரையும் கொடுக்க கேகேஆர் அணி முடிவு எடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் 3 மாதங்களில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக தங்களுக்கு தேவையான வீரர்களை டிரேட் செய்து கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே, ராஜஸ்தான் மற்றும் கேகேஆர் ஆகிய 3 அணிகளும் டிரேட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. சஞ்சு சாம்சன் இனிமேல் ராஜஸ்தான் அணிக்கு விளையாட விரும்பாத சூழலில், அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பிராண்ட் வேல்யூ இருக்கும் இந்திய வீரர்களை வாங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே அணி விருப்பம் தெரிவித்தது. ஆனால் ராஜஸ்தான் அணி தரப்பில் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக சிஎஸ்கே அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா அல்லது சிவம் துபே ஆகிய மூவரில் ஒருவரை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிஎஸ்கே நிர்வாகம், வாய்ப்பே இல்லை ராஜா என்று கூறி கோரிக்கையை நிராகரித்தது.
இதன்பின் ராஜஸ்தான் அணி நிர்வாகம் கேகேஆர் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில சீசன்களாகவே கேகேஆர் அணிக்கு தரமான இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் கிடைக்காமல் தவித்து வருகிறது. 2024 சீசனில் பில் சால்ட் இடத்தை நிரப்ப முடியாமல், கடந்த சீசனில் மோசமான தோல்விகளை சந்தித்தது. அதேபோல் ரஹானேவின் இடத்தை எளிதாக சஞ்சு சாம்சனால் நிரப்ப முடியும்.
கேப்டனாக ஆடிய அனுபவம் இருப்பதால், கேகேஆர் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக ரிங்கு சிங் மற்றும் ஹர்சித் ராணாவை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கேகேஆர் அணி வேறு வாய்ப்புகளை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்திருக்கிறது.
அதாவது 2 இந்திய வீரர்களை கேகேஆர் அணி கொடுக்க முன் வந்துள்ளது. கேகேஆர் அணிக்காக விளையாடி வரும் ரகுவன்ஷி மற்றும் கடந்த சீசனில் ரீடெய்ன் செய்யப்பட்ட ரமன்தீப் சிங் ஆகிய இருவரையும் கொடுக்க கேகேஆர் அணி தயாராக இருப்பதாக கூறி இருக்கிறது. இவர்களுக்கு கொடுத்த தொகை போக, மீதம் பணமாக கொடுக்கவும் கேகேஆர் அணி ஒப்புதல் கூறி இருக்கிறது.
இதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. ஏனென்றால் ஐபிஎல் மினி ஏலத்தில் சஞ்சு சாம்சனை விட்டால், அவர் மிகப்பெரிய தொகைக்கு செல்வார். அதேபோல் மினி ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய கிராக்கி இருக்கும். அதனால் ரகுவன்ஷி மற்றும் ரமன்தீப் சிங் இருவரையும் பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் நிர்வாகம் ஒப்புதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.