மும்பை: பேட்மிண்டன் ஜாம்பவான் சாய்னா நேவாலிடம் கேகேஆர் அணியின் இளம் வீரர் ஆங்ரிஷ் ரகுவன்ஷி மன்னிப்பு கோரிய சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட்டை விடவும் டென்னிஸ், கூடைப்பந்து மற்றும் பேட்மிண்டன் ஆகியவை அதிக உடல் உழைப்பை கோருவதாக சாய்னா நேவால் கூறியிருந்தார். இதற்கு ரகுவன்ஷி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
கேகேஆர் அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவாகி வருகிறார் ஆங்ரிஷ் ரகுவன்ஷி. இந்திய அணிக்காக யு19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அவர், அபிஷேக் நாயரிடம் நேரடியாக பயிற்சி பெற்று வருபவர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் ரகுவன்ஷியை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்தது. கடந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடிய ரகுவன்ஷி 163 ரன்களை விளாசி கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில் பேட்மிண்டன் ஜாம்பவான் சாய்னா நேவால் பேச்சிற்கு கருத்து கூறிய சம்பவத்தால் ரகுவன்ஷி சர்ச்சையில் சிக்கியுள்ளார். டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்தும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு குறித்து சாய்னா நேவால் பேசி இருந்தார்.
அதில், இந்திய மக்கள் நீரஜ் சோப்ரா, சாய்னா, சிந்து, குத்துச்சண்டை வீரர்கள் உள்ளிட்டோர் குறித்து அப்டேட் தெரிந்து கொள்கிறார்கள். இந்தியா போன்ற விளையாட்டு கலாச்சாரம் குறைவாக இருக்கும் நாட்டில், தடகள வீரர்களின் சாதனைகள் அசாத்தியமானது. கிரிக்கெட் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறது.
கிரிக்கெட்டை விடவும் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து ஆகியவை உடல் உழைப்பை கோருபவை. வேகமாக நகரும் விளையாட்டில் விளையாட்டு வீரர்கள் மூச்சு வாங்குவதற்கு கூட நேரம் கிடைக்காது. ஆனால் கிரிக்கெட் அப்படியல்ல என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை பகிர்ந்து, பும்ராவின் 150கிமீ வேகத்தில் வரும் பவுன்சர் தலைக்கு வரும் போது சாய்னா நேவால் எப்படி நகர்வார் என்பதை பார்க்க வேண்டும் என்று ரகுவன்ஷி பதிலடி கொடுத்தார்.
இது சர்ச்சையாகியது. கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுகளுக்கும் அளிக்க வேண்டும் என்பதே சாய்னா நேவாலின் கருத்தாக இருந்தது. அதனை ரகுவன்ஷி புரிந்து கொள்ளாமல் பேசுவதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன்பின் ரகுவன்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில், எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் நகைச்சுவையாக தான் அந்த கருத்தை பதிவிட்டேன். ஆனால் மீண்டும் அதனை படிக்கும் போது, முதிர்ச்சியற்ற கருத்தாக தெரிகிறது. எனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.