ஊரடங்கின் போது ஊர் சுற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்.. வேட்டு வைத்து அனுப்பிய போலீசார்.. முழு விவரம்!
புனே: கொரோனா ஊரடங்கின் போது எந்தவித சரியான காரணமும் இன்றி காரில் ஊர் சுற்றி வந்த கொல்கத்தா அணி வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பொதுமக்கள் மருத்துவப் படுக்கை, ஆக்சிஜன் வசதிகளுக்காக திண்டாடி வருகின்றனர்.
இதற்காக கிரிக்கெட் உலகை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் விழிப்புணர்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ராகுல் திரிபாதி அதற்கு அப்படியே மாறாக நடந்துக்கொண்டுள்ளார்.

ஏமாற்றிய திரிபாதி
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருபவர் இளம் வீரர் ராகுல் திரிபாதி. இவர் களத்திற்கு வெளியில் மிகவும் ஜாலியான மனிதர், நேர்மையாக நடந்துகொள்பவர், அடுத்தவரின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி அடைபவர் என சக வீரர் பேட் கம்மின்ஸ் சமீபத்தில் புகழ்ந்து தள்ளியிருந்தார். ஆனால் அவை அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக அவர் தற்போது நடந்துக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு விதிமுறை
ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்ட பிறகு திரிபாதி தற்போது புனேவில் வசித்து வருகிறார். மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் திரிபாதி நேற்று எந்தவித சரியான காரணமும் இன்றி காரில் ஊர் சுற்றி வந்துள்ளார். அதுவும் மாஸ்க் போடாமல் வலம் வந்துள்ளார். அவருடன் மற்றொரு நபரும் இருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை
அவர் கோத்வா பகுதியில் காரில் சுற்றி வந்த போது அம்மாவட்ட போலிசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடன் எதற்காக ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே வந்தீர்கள் என போலீசார் கேட்ட கேள்விக்கு ராகுல் திரிபாதி சரியான பதிலை கொடுக்கவில்லை. மேலும் மாஸ்க் அணியாமலும் இருந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் அவரிடம் போலீசார் கொடுத்துள்ளனர்.

ரசிகர்கள் அதிருப்தி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் பிரபலங்கள் தான் சரியாக விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்களே இப்படி செய்வது சரியான உதாரணம் அல்ல என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications