கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் தமிழக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தன் அபாரமான பந்துவீச்சால் டெல்லி கேபிடல்ஸ் அணியை நிலைகுலைய வைத்தார்.
இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர்கள் பிரித்வி ஷா 13, ஜேக் பிரேசர் 12, ஷாய் ஹோப் 6, அபிஷேக் போரல் 18 ரன்களில் கொல்கத்தா அணியின் வேகப் பந்துவீச்சாளர்களிடம் வீழ்ந்தனர். டெல்லி கேபிடல்ஸ் 68 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த போதும் ரிஷப் பண்ட் களத்தில் நின்று ரன் குவித்தார்.

அப்போது வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசி இரண்டு விக்கெட் வாய்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால், கொல்கத்தா அணியின் ஃபீல்டர்கள் கேட்ச்களை நழுவ விட்டு செய்த சொதப்பலால் அந்த விக்கெட் வாய்ப்புகள் பறிபோனது. ஆனாலும், வருண் பந்துவீச்சில் ரன் குவிக்க முடியாமல் திணறிய ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் குமார் குஷாக்ரா விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மோசமான நிலைக்கு சென்றது. வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் குல்தீப் யாதவ் 35 ரன்கள் சேர்த்து டெல்லி கேபிடல்ஸ் 153 ரன்கள் எடுக்க காரணமாக இருந்தார். 20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது.
டெல்லி அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்த வருண் சக்கரவர்த்தி உண்மையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டியவர். அவரது காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கிய இந்திய அணி நிர்வாகம் அவருக்கு அதன் பின் வாய்ப்பே கொடுக்கவில்லை. தற்போது 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் மாற்று பந்துவீச்சாளராகவாவது இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.