மும்பை: கேகேஆர் அணியில் முன்னாள் ஆலோசகர் கவுதம் கம்பீரின் இருப்பை மிஸ் செய்வதாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்திக் ராணா தெரிவித்துள்ளார். சந்திரகாண்ட் பண்டிட், அபிஷேக் நாயர் மற்றும் பிராவோ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும், கம்பீரின் இடத்தை இன்னும் நிரப்பவில்லை என்றும் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வி, ஒரு ஆட்டம் ரத்து என்று 7 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் கேகேஆர் அணி வெற்றிபெற்றால் மட்டுமே, அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

கேகேஆர் அணி சிறப்பாக தொடங்கினாலும், அடுத்தடுத்து அடைந்து வரும் தோல்விகள் அந்த அணி ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது. இதனால் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இல்லாதது அந்த அணி வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சித் ராணா பேசி இருக்கிறார்.
அதில் ஹர்சித் ராணா பேசுகையில், கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகளில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அபிஷேக் நாயரும் கூட மீண்டும் வந்துவிட்டார். ஆனால் கவுதம் கம்பீர் இருக்கும் போது கேகேஆர் அணி வீரர்களிடையே இருக்கும் த்ரில் இப்போது குறைவாக உள்ளது. அதனை கொஞ்சம் பர்சனலாகவும் மிஸ் செய்கிறேன்.
கவுதம் கம்பீரை சுற்றி இருக்கும் Aura, ஒட்டுமொத்த அணிக்கும் பரவும். கவுதம் கம்பீரின் இருப்பே, அணி மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதுதான் கொஞ்சம் மிஸ் செய்கிறோம். ஆனாலும் அபிஷேக் நாயர், சந்திரகாண்ட் பண்டிட், பிராவோ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களால் எங்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தி தர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் கேகேஆர் அணியின் தோல்விக்கு சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரஸ்ஸல் ஆகியோரின் மோசமான பேட்டிங் ஃபார்மே காரணமாக அமைந்துள்ளது. அதேபோல் தொடக்க வீரர்களான டி காக், குர்பாஸ் இருவருமே இதுவரை ரன்களை குவிக்கவில்லை. இதனால் ரஹானே தனியாக போராடி வருவதால், அந்த அணி தோல்வியை அடைந்து வருகிறது.