கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே தங்கள் தோல்விக்கு என்ன காரணம் என விளக்கம் அளித்தார்.
அப்போது சுனில் நரேன் பந்து வீசுவதில் அதிக சிரமத்தை எதிர்கொண்டார். அவரால் எந்த விதத்திலும் ரண்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய 21வது ஐபிஎல் லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 239 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நிலையில் கடைசி ஓவர் வரை போராடி 234 ரன்கள் எடுத்தது. நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்தது.
இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே, "இது மிகவும் நெருக்கமான போட்டியாக இருந்தது. நான் டாஸ் போடும்போது இந்த விக்கெட் 40 ஓவர்களும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதேபோலவே இருந்தது. நாங்கள் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்."
"இது நிச்சயம் சிறந்த ஆட்டம். இறுதியில் நாங்கள் வெறும் நான்கு ரன்களில் தான் தோல்வி அடைந்திருக்கிறோம். 230 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நோக்கி ஆடும் போது இடையே விக்கெட்டுகள் விழத்தான் செய்யும். பேட்ஸ்மேன்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டார்கள்."
"எங்களின் பந்துவீச்சு நடு ஓவர்களில் நன்றாக இருந்தது. சுனில் நரேன் பந்து வீச்சில் மிகவும் திணறினார். எப்போதும் எங்களுக்கு சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி நடு ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவார்கள். ஆனால் இன்று எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சிரமமான நாளாக இருந்தது" என்றார் அஜின்கியா ரஹானே.