கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சிக்ஸர் மழை பொழிந்து மிரட்டியது. அந்த அணியின் நிக்கோலஸ் பூரன் கொல்கத்தா அணியை மிரள வைக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை ஆடினார்.
அப்போது அவர் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இதுவரை ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை விரைவாக எட்டிய வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரே ரசல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் 1120 பந்துகளில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்திருந்தார்.

தற்போது நிக்கோலஸ் பூரன் 1198 பந்துகளில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்து சாதனை படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் வீரேந்தர் சேவாக் இருக்கிறார். அவர் 1211 பந்துகளில் 2000 ரன்களை எடுத்திருக்கிறார். கிறிஸ் கெயில் 1251 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் 1306 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 1309 பந்துகளிலும் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளனர். இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீரர்களான எய்டன் மார்கிரம் 28 பந்துகளில் 47 ரன்களும், மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்தனர்.
மூன்றாம் வரிசையில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அவர்கள் இருவரது அதிரடியையும் தாண்டினார். அவர் 36 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் வைபவ் அரோரா மட்டுமே குறைவாக ரன் விட்டுக் கொடுத்தனர். வருண் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வைபவ் அரோரா 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்தனர்.