கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போராடி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டி சென்றது.
அப்போது ரிங்கு சிங் அதிரடியாக ஆடிய போதும் கடைசி ஓவரில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதை எடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இருபது ஓவர்களில் 238 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் எய்டன் மார்கிரம் 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். நிக்கோலஸ் பூரன் 36 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து இருந்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 238 ரன்கள் சேர்த்தது.
இதை அடுத்து 239 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் குவின்டன் டி காக் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுனில் நரேன் அதிரடியாக 13 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.
கேப்டன் அஜின்கியா ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடினார்கள். ரஹானே 35 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். வெங்கடேஷ் ஐயர் 29 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின் ரிங்கு சிங் மட்டுமே நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தார். அவர் களத்தில் இருந்த நிலையில் கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. எனினும் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார் ரிங்கு சிங். ஆனால், 19 ரன்கள் மட்டுமே கிடைத்தது. இதை அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.