KKR vs LSG: சிஎஸ்கே போலவே.. அதே டெய்லர் அதே வாடகை.. பேட்டிங்கில் காப்பாற்றிய ரிங்கு சிங்!
லக்னோ: லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு நேர்ந்த அதே படுமோசமான நிலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஏற்பட்டது. தொடக்க பேட்ஸ்மேன்களின் படுமோசமான ஆட்டத்தால் சீட்டுக்கட்டு போல விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணியை, ரிங்கு சிங் ஒற்றை ஆளாக நின்று காப்பாற்றியுள்ளார். லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மோசின் கானின் அனல் பறக்கும் பந்துவீச்சில் சிக்கி சின்னாபின்னமான கொல்கத்தா அணி போராடி 150 ரன்களை தாண்டியது.
லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்த 38வது லீக் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. விக்கெட் கீப்பர் டிம் செய்ஃபெர்ட் ரன் ஏதுமின்றியும், கேப்டன் அஜிங்க்யா ரஹானே 10 ரன்களிலும், ரகுவன்ஷி 9 ரன்களிலும், அதிரடி வீரர் ரோவ்மன் பாவெல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனால் பவர்பிளே ஓவர்களான முதல் 6 ஓவர்களில் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தத்தளித்தது. சமீபத்தில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர்பிளேயில் விக்கெட்டுகளை இழந்து திணறிய அதே நிலைமையை இது அப்பட்டமாக நினைவுபடுத்தியது. லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் கொல்கத்தா பேட்ஸ்மேன்களை மூச்சு விட விடாமல் திணறடித்தார். அவர் தனது 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து ருத்ரதாண்டவம் ஆடினார்.
இந்த இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேமரூன் கிரீன் சற்று அதிரடி காட்டி 21 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். ஆனால் அனுகுல் ராய் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். ரமன்தீப் சிங் 11 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தாலும், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போல மறுமுனையில் நங்கூரம் இட்டு நின்றார் அதிரடி நாயகன் ரிங்கு சிங். தனது வழக்கமான பொறுப்பான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தனி ஒருவனாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 51 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்சர்களுடன் 83 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
கடைசி கட்டத்தில் சுனில் நரைனுடன் இணைந்து ரிங்கு சிங் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி முறியடிக்கப்படாத 8வது விக்கெட்டுக்கு 30 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தது. இதில் நரைன் பங்கு 4 ரன்கள் மட்டுமே. தனது ஒற்றை ஆள் போராட்டத்தால் ரிங்கு சிங் அணியை தூக்கி நிறுத்த, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்தது.
சிஎஸ்கே அணியும் இதே போலவே துவக்கத்தில் விக்கெட்களை இழந்து ஆமை வேகத்தில் ஆடியது. பின்னர் கடைசி 8 ஓவர்களில் வேகமாக ரன் குவித்து 20 ஓவர்களில் 158 ரன்கள் சேர்த்தது. ஆனாலும், குஜராத் அணியிடம் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications
