கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த ஆண்டு அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். முதல் சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சில போட்டிகளாக வெளியே அமர்த்தப்பட்டிருந்த அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணியில் இடம் பெற்றார். அவர் ஆல்ரவுண்டராக சில ஓவர்கள் ஸ்பின் பந்துவீச்சு செய்வார் என்பதால் இந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதே சமயம் பேட்டிங்கில் அவர் சொதப்பி வந்தாலும், அவரை நம்பி நான்காம் வரிசையில் களமிறக்கினார் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் 8 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதுவும் ஐந்தாவது முறையாக வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார்.
இதை அடுத்து, "கிளென் மேக்ஸ்வெல்லை ஆஸ்திரேலியாவுக்கே அனுப்புங்கள்" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் மட்டும் சொதப்புவதும், ஆஸ்திரேலிய அணிக்காக ஆடும் போது ரன் குவிப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதை சுட்டிக் காட்டித் தான் ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எட்டு முறை வருண் சக்கரவர்த்திக்கு எதிராக கிளென் மேக்ஸ்வெல் விளையாடியிருக்கிறார். அதில் ஐந்து முறை அவரது பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஐபிஎல் தொடரில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக 8 இன்னிங்ஸ்களில் விளையாடி, 33 பந்துகளில் 50 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி வருண் சக்கரவர்த்திக்கு எதிராக 10 ரன்கள் மட்டுமே. ஸ்ட்ரைக் ரேட் 151.5 என்பதாக உள்ளது. இதன் மூலம் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக தனது பலவீனத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வருண் சக்கரவர்த்தியின் ஓவரில் சரியாக விளையாட மாட்டார் என்பதை யூகித்து, வருணின் நான்காவது ஓவரை கிளென் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்தபோது வீசச் செய்தார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே. அந்த திட்டமும் வேலை செய்தது. 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் வெளியேறினார்.
எனினும், இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்களும் சேர்த்திருந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.